பால கணேசன்
சொல்லாமலே படத்துல இருந்தே ஆரம்பிக்கலாம் சார்.. ரொம்ப நாளா மனசுல இருக்கிற கேள்வி இது. படம் வெளிவந்திருச்சி, ஹிட்டும் ஆயிருச்சு. ஆனாலும் நாக்கை அறுத்துக்கிற அந்த க்ளைமாக்ஸ் பரவலா எதிர் விமர்சனத்துக்கு உள்ளானது. அப்புறம் சோசியல் மீடியா காலகட்டத்துல அது மீம் எல்லாம் போட்டு கேலி பண்ற விஷயமா கூட மாறிடுச்சு. ஒரு படைப்பாளியா இந்த எதிர்மறை விமர்சனத்தையும், கேலியையும் நீங்க எப்படி எதிர்கொள்ளுறீங்க.. அதுபோக, இப்போ சொல்லாமலே நீங்க எழுதியிருந்தா இதே க்ளைமாக்ஸ் வச்சிருந்திருப்பீங்களா?
சசி – நான் வெளிப்படையாவே சொல்றேன்.. இன்னைக்கி சொல்லாமலே எழுதியிருந்தாலும் இதே க்ளைமாக்ஸ்தான் வச்சிருந்திருப்பேன். அதுல சந்தேகமே வேணாம். மத்தபடி இந்த எதிர் விமர்சனம், இதென்ன நாக்கை அறுத்துக்கிறது, மூக்கை அறுத்துக்கிறது மாதிரியான கிண்டல்கள் எல்லாம் வருத்தப்படுறதுக்கு ஒன்னுமில்லை. ஏன்னா நான் முதல்முறையா இந்த கதையை சொல்றப்போ இந்த க்ளைமாக்ஸே இல்ல. அவன் நாக்கை ஆபரேஷன் பண்ணி எடுக்க டாக்டர்கிட்ட போறான். அங்க பிரகாஷ் ராஜ், “ஒரு டாக்டரா இதை நான் பண்ணமுடியாது”ன்னு சொல்லிட்டு அவனோட நாக்கை அறுக்காம, வெறுமனே மரத்துப்போற ஊசி மட்டுமே போடுறதாதான் வச்சிருந்தேன். அப்புறம் ஷூட்டிங் போயி 15 நாளுக்கு பிறகுதான் இந்த க்ளைமாக்ஸ் தோணிச்சி. ஒரு சோசியல் கான்ஷியஸ் உள்ள இயக்குநரா இந்த க்ளைமாக்ஸ் வைக்கக்கூடாதுனும் தோணுது. ஆனா இந்த க்ளைமாக்ஸ் வச்சா அது இந்த கதைக்கு பொருத்தமா இருக்கும், படமும் கவனம் பெறும்னும் தோணுது. நண்பர்கள்கிட்ட சொன்னேன் இதை. அவங்க ரெண்டு அணியா பேசுனாங்க. ஆனா உறுதியா ஒரு முடிவுக்கு வரமுடியல. ஷூட்டிங்கும் அதனால தள்ளிப்போச்சி. அப்புறம் சினிமாவுக்கு சம்பந்தமில்லாத என்னோட நண்பர் ஒருத்தர்கிட்ட கருத்து கேட்டேன். அந்த நண்பர் நாக்கை அறுத்துக்கிற க்ளைமாக்ஸ்தான் அதிர்ச்சி தர்ற மாதிரி இருக்கு. ஆனா எது வச்சா ஓடும்னு என்னால கணிக்க முடியலைன்னு சொல்லிட்டாரு.
ஓடணும்ங்கிறதுதான இதுல முக்கியமான பாயிண்ட்!
சசி – ஆமா. ஆனா இதுல இன்னொரு சிக்கல் என்னன்னா என்னோட முதல் க்ளைமாக்ஸுக்கு ஏத்த மாதிரிதான் அதுவரைக்குமான காட்சிகள் நிகழுது. இப்போ க்ளைமாக்ஸ் மாத்துறப்போ அதுக்கு முந்தைய சம்பவங்களை மாத்தவேண்டிய கட்டாயமாயிருச்சி. அப்பவும் “ஒன்னு சமூக அக்கறையோட பண்ணனும்னா நீ இதை பண்ணாத.. கொடி பிடிக்க போயிரு. இல்ல ஒரு கதையாசிரியனா ஒரு வெற்றியை, இந்த கதைக்கு நியாயத்தை தரனும்னா இந்த க்ளைமாக்ஸ் வை” அப்படினு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தேன்.
ரொம்ப சரியான முடிவுன்னுதான் நான் சொல்வேன் சார். காரணம் நீங்களே நிறைய இடங்கள்ல சொன்ன மாதிரி, உங்களை நம்பி பணம் போடுற தயாரிப்பாளரையும் மனசுல வச்சிதான் இந்த முடிவுகள் எடுக்கப்படணும்.
ஆமா. அதுவுமில்லாம கதையாசிரியன் அப்படிங்கிற நாற்காலிக்கு நான் விசுவாசமானவனா இருக்குறதும் இந்த இடத்துல ரொம்ப முக்கியம்னு பட்டுச்சு. அதுபோக முதல்ல ‘என்னது நாக்கை எல்லாமா அறுத்துக்கிறாங்க’ன்னு நினைச்சாலும்,படம் முடிஞ்சி வெளிய வரும்போது, “இது ஒன்னும் அவ்ளோ பெரிய பிரச்சினையா தெரியலையே.. அவன் நாக்கை அறுத்துக்கிட்டது நியாயமாதான் தெரியுது”ன்னு அவங்களே ஏத்துக்கிட்டாங்க. அந்த கன்வின்ஸ் திரைக்கதையில இருந்தது. இயக்குனர் மகேந்திரன் சார் முதக்கொண்டு இதைப்பத்தி பேசும்போது உணர முடிஞ்சது அதை. என்னோட பிச்சைக்காரன் படத்துக்கே கூட இப்படியான எதிர்ப்புகள் சில இடங்கள்ல வரும்னு நான் எதிர்பார்த்தேன். ஆனா அங்கேயும் இந்த திரைக்கதையில இருந்த நம்பகத்தன்மையால அது நிகழல.
அந்த கேலி, கிண்டல்கள் பத்தின உங்க பார்வையையும் கொஞ்சம் சொல்லுங்க சார்..
அதை நான் ஒரு பொருட்டா ஏன் எடுத்துக்கிறதில்லன்னா, பாரிஸ் போயிருந்தப்போ Eiffel Tower பக்கத்துல நின்னுட்டிருந்தேன். திடீர்னு “சசி சார்”ன்னு ஒரு குரல். நம்ம பாண்டிச்சேரிக்காரரு.. அங்க ஓட்டல் வச்சிருக்காரு. அவர் கையை கொடுத்துகிட்டே,” சார் சொல்லாமலே படம் என்ன மாதிரி படம் சார்.. மறக்க முடியாத படம்’ன்னு சொல்லி ரொம்ப பேசிட்டிருந்தாரு. படம் வந்து 20 வருஷத்துக்கு மேலாயிருச்சி. ஆனா அது கொடுத்த இம்பாக்ட் அப்படியே இருக்கு பாருங்க. அதனால இந்தமாதிரி கேலி கிண்டல்கள் எல்லாம் இருந்துகிட்டேதான் இருக்கும். அதனால இதையெல்லாம் பொருட்டா எடுத்துக்கல. ஆனா இப்படி தவறான க்ளைமாக்ஸ் உள்ள படத்தை எடுத்துட்டோமேங்கிற அந்த குற்ற உணர்ச்சி 0.1% இருக்குன்னு கண்டிப்பா சொல்லலாம்.
இந்த க்ளைமாக்ஸ் வைக்கலாம்னு நீங்க கன்வின்ஸ் ஆன பாயிண்ட் எது சார்?
அன்புங்கிறது ஒருத்தனை ஹானஸ்ட்டா, நேர்மையானவனா இருக்க வைக்குது அப்படிங்கிற பாயிண்ட்லதான் நான் கன்வின்ஸ் ஆனேன். அதனாலதான் அதை என்னால கன்வின்ஸிங்கா சொல்ல முடிஞ்சது. ஆனா அன்பு ஒருத்தனை நேர்மையா இருக்கவைக்கும்னு நான் சொல்ல வந்த பாயிண்ட் பெருவாரியான மக்களுக்கு போயி சேரலைங்கிறதுதான் உண்மை.
இதுல ஒரு விஷயம் என்னன்னா, பிச்சைக்காரன் படத்தோட உண்மையான கதையில அந்த பணக்காரரோட அம்மாவுக்கு உடல்நலம் சரியான பிறகும் கூட, அந்த மனிதர் அந்த வேண்டுதலை நிறைவேற்ற பிச்சை எடுத்தார்ன்னு சொல்லியிருந்தீங்க. அதுவும் அன்பின் காரணமாக நேர்மையா இருந்த ஒருத்தரோட கதைதானே சார்.
ஆமா. நிச்சயமா அதுதான்.
எனக்கு டிஸ்யூம் படத்தை நினைச்சாலே உடனே ஞாபகம் வர்றது பக்ரு வச்சி நீங்க எழுதுன அந்த காமெடி சீக்வன்ஸ்-தான். சொல்லாமலே, ரோஜாக்கூட்டம் படத்துலயும் கூட தனி காமெடி டிராக் இருக்கும். சீரியசான படைப்பாளிகள் படத்துல இடம்பெறுற நகைச்சுவைகள் ரொம்ப நுண்ணியமானதாகவும், ஒரு நார்மல் காமெடி படத்துல வர்றதை விட சிரிப்பை அதிகம் தர்றதாகவும் இருக்கும். அது உங்க படத்துலயும் நிகழ்ந்திருக்கு. இப்போ தனியா காமெடி ட்ராக்ன்னு ஒன்னு இல்லவே இல்லை படங்கள்ல. நூறு சாமியே எடுத்துக்கிட்டா, அத எவ்ளோ பரபரப்பான த்ரில்லர் மாதிரி எடுத்திருக்கீங்களோ, அதேயளவு ஒரு நகைச்சுவைத் தன்மையும் காட்சிகள்ல இருந்துட்டே இருக்கும். இது எழுதும்போதே வந்திருமா இல்ல கான்ஷியஸா அதை பண்ண வேண்டி இருக்குமா?
ஒரு அம்மாவுக்கு அவங்களோட ரெண்டு பசங்க கல்யாணம் பண்ணி வைக்கிறதுங்கிற கதை ரொம்ப சீரியசானது. சாதாரண நிகழ்வு இல்ல இங்க. இந்த மாதிரி கதையை சொல்லும்போது பார்க்குறவங்களை ஹோல்ட் பண்ணி வைக்க சில விஷயங்கள் பண்ணியே ஆகணும். அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கிறப்போ, விஜய் ஆண்டனி நடிச்சிருக்கிற ஏழுமலை கதாபாத்திரம் அப்பாவியானவன் ஆனா ஸ்மார்ட்டானவன் அப்டிங்கிறப்போ அங்க தானாவே ஒரு ஹியூமர் வந்துருது. அப்போ ஏழுமலை கதாநாயகியை சந்திக்கிறப்போ ஒரு ஐஸ் வண்டியை கொண்டு வந்து வைக்க வேண்டி இருக்கு. “ஏங்க உங்க கூட நடந்து வர்றதுக்கு சந்தோசப்படணுமா இல்ல இத்தனூண்டு ஐஸ் கீழ விழுந்திருச்சேன்னு கவலைப்படணுமா”ங்கிற வசனம் அங்க எழுத முடியுது. இப்படி ஒரு வசனம் எழுத யோசிச்சப்போ அங்க ஐஸ் வண்டி இருக்குன்னு எல்லாம் மைண்ட்ல இல்ல. “உங்க கூட வர்றதுக்கு சந்தோசப்படணுமா இல்ல டேஷ் இப்படி ஆயிருச்சேன்னு வருத்தப்படணுமா”ங்கிறதுதான் ஆரம்பத்துல இருந்தது. அது ஐஸ் வண்டியா மாறுனப்போ அது அழகாகுது, புன்னகைக்கவும் வைக்குது. அதுபோக, “ஏங்க அது ஐஸ்-ங்க… நாக்குல பட்டாலும், மண்ணுல விழுந்தாலும் அது கரைஞ்சிதான் போகும்”ங்கிறது எல்லாம் அதோட தொடர்ச்சியா அங்க வந்த வசனங்கள்தான்.
அப்போ காமெடியா வர்றதுங்கிறது கான்ஷியஸாவே நீங்க பண்றதுதான்..
நீங்க சொன்னமாதிரி இப்போ தனியா காமெடி டிராக் அப்படிங்கிறது ஒழிஞ்சே போச்சு. அது எடுபடவும் செய்யாது. அதனால திரைக்கதை எழுதுறப்போ அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிட்டே இருக்கனும். உதாரணமா இதுல அண்ணன் தம்பி கதாபாத்திரம் வருது. அதுல அண்ணன் செல்வியை அம்மான்னு கூப்பிடுவான், ஆனா தம்பி அம்மாவை செல்வி அப்படின்னு பேர் சொல்லிதான் கூப்பிடுவான். இப்படி வித்தியாசப்படுத்துறது ஆடியன்ஸை திரும்பிப்பார்க்க வைக்கிறத, அவங்களோட அட்டென்ஷனை காட்சிகள் மேல ஒருமுகப்படுத்துறதை செய்யும்.
டிஷ்யூம் படத்துல பக்ரு வச்சி நீங்க பண்ணுன அதே நகைச்சுவையை இப்போ பண்ணுனா “ஐயோ பாடி ஷேமிங் பண்றாரு இயக்குனர்”ன்னு அதை விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருப்பாங்க. இத்தனைக்கும் படத்துல பக்ருவோட கதாபாத்திரமே தன்னோட உடல்வளர்ச்சியை தனக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிற ஒரு ஆளாதான் வடிவமைச்சிருப்பீங்க. அதுக்கான நியாயமும் இருக்கும். இதையும் நீங்க கான்ஷியஸாதான் பண்ணீங்களா?
நீங்க சொன்னமாதிரி இப்போ அந்தமாதிரி காட்சிகளை வைக்கவே முடியாது. நான் வைக்கவும் மாட்டேன். அப்போ எனக்கு இந்த பாடி ஷேமிங்கா இது எடுத்துக்கப்படலாம்ங்கிற உணர்வு இல்லாம இருந்திச்சி. இப்போ அப்படி இல்ல. உதாரணத்துக்கு என்னோட ஆரம்ப கால படங்கள்ல நான் ஐட்டம் டான்ஸ் வச்சிருந்தேன் தொடர்ச்சியா. அப்புறம் இது இனி தேவையில்லைங்கிற இடத்தை நோக்கி நகர்ந்துட்டேன். அந்த யோசனை வளர்ச்சி ரொம்ப முக்கியம்.
என்னதான் சினிமா ஒரு காட்சி ஊடகம், வசனம் மூலமா கதை நகரக்கூடாதுன்னு சொன்னாலும் கூட, ஒரு படத்தை யோசிச்சதும் ஒரே ஒரு வசனம் பளிச்சுன்னு மனசுல மின்னும். நூறு சாமி படத்துலயே கூட ஏழுமலை சொல்ற, “யாரு சார் வாழாவெட்டி? எனக்கு வாழ்க்கை கொடுக்குறாங்க அவங்க..அப்போ நான்தானே சார் வாழாவெட்டி” வசனம் அவ்ளோ பிடிச்சது. படத்தோட மொத்த இம்பாக்டையும் அந்த ஒரு வசனம் தூக்கி பிடிக்கும். உங்க பார்வையில வசனங்களோட முக்கியத்துவம் என்ன, அதை நீங்க எப்படி அணுகுறீங்க?
உண்மையில இப்படி அழுத்தமா ஒரு வசனம் எழுதி கைத்தட்டு வாங்கணும்னு எல்லாம் நினைச்சி நான் ஒரு காட்சி வைக்கிறதோ இல்ல வசனம் எழுதுறதோ இல்லவே இல்லை. அந்த அழுத்தமான காட்சியை நோக்கி, வசனத்தை நோக்கி நம்மளை அது இழுத்துட்டு போகும். அதுதான் மிகச்சிறந்த இம்பாக்ட் தரும். நூறு சாமியில க்ளைமாக்ஸ்ல செல்வி தன்னோட அம்மாகிட்ட, “66 வயசாகியும் நீ இன்னும் உன் புருஷனோடதான வாழ்ந்துட்டிருக்க” அப்படினு கேட்குற அந்த வசனம், நிஜத்துல செல்வியோட மூத்த பையன் தன் பாட்டியை நோக்கி கேட்டது. படத்துல அதை வைக்கிறப்போ செல்வியே அதை கேட்குறதா வச்சோம்.
அதை அம்மா கேட்டதுதான் சார் நியாயம். அது அவ்ளோ இம்பாக்ட் தந்தது. மறக்க முடியாத காட்சி மற்றும் வசனம் அது.
அதுபோக, இந்த வாழாவெட்டிங்கிற பேர் ஏன் ஆணுக்கு இல்ல? புருஷன் இறந்துட்டா பொண்ணுக்கு விதவைங்கிற பேர் இருக்கு. ஆனா அது ஆணுக்கு ஏன் இல்ல அப்படினு என் மனசுக்குள்ள எழுந்த கேள்வியை நான் இப்படி உபயோகப்படுத்திக்கிறேன். வசனமா அதை ஒரு பொருத்தமான காட்சியில வைக்கிறப்போ அது முழுமையாகுது.
அதேமாதிரி சின்னவன், “அம்மாவுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணனும்னு அவன் சொல்றதோட அர்த்தம் புரியுது. ஆனா அதுல இருக்கிற அந்த நியாயத்தை தாங்கிக்க முடியல. அதனாலதான் நான் அவன்கூட சண்டை போட்டேன்”னு சொல்ற வசனமும் ரொம்ப முக்கியமானதுனு எனக்கு தோணிச்சி. கேட்டதுமே மனசுல அழுத்தமா ஒட்டிக்கிச்சி. வாழ்க்கையோட பல தருணங்கள்ல நாமளே அந்த நியாயம் தாங்கமுடியாம சண்டை போட்டிருப்போம்ல சார்.
ஒரு காட்சி எப்படியான அழுத்தத்தை உருவாக்க நினைக்கிறமோ அதுக்கான நியாயத்தை நாம காட்சி வழியா,வசனம் வழியா சொல்றது மூலமா மட்டுமே நிகழ்த்த முடியும். இல்லைனா அது எடுபடாது.
சார் இந்த இடத்துல ஒரு கேள்வி. சமீபத்துல வந்த மாலிவுட் டைம்ஸ் அப்படிங்கிற மலையாள படத்துல தொடர்ச்சியா ஒரு அமைதியின்மையை தந்துட்டே இருக்கிற மாதிரி ஒரு திரைக்கதை அமைச்சிருப்பாங்க. ஹீரோ கிட்ட நாமளே, “ஏண்டா இப்படி பண்ற.. ப்ளீஸ் பண்ணாத..” அப்படினு உரையாட ஆரம்பிச்சிருவோம். இப்படி உங்க படங்கள்ல சில காட்சிகள் இருந்திருக்கு. சொல்லாமலே க்ளைமாக்ஸ் கூட “ஐயோ நாக்கை அறுத்துக்கிட்டானே”கிறது, பூ படத்துல எத்தனையோ சந்தர்ப்பங்கள்ல அழாத மாரி, தன்னோட தங்கராசு தன் மனைவி முன்னால ஒரு அடிமை மாதிரி இருக்கிற சூழலை எதிர்பாராவிதமா தெரிஞ்சிக்க வர்ற காட்சி எல்லாம் ஒரே அடி அடிக்கும் பார்க்குறவங்களை. எழுதும்போதோ இல்லை அந்த காட்சிகளை எடுக்கும்போதோ, “இது ரொம்ப அன்ஈஸி ஆக்கும் பார்க்குறவங்களை”ன்னு நினைச்சி அதோட இம்பாக்ட் குறைச்சிறலாம்னு எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?
பூ படத்துல நீங்க சொன்ன அந்தக் காட்சி, ச.தமிழ்செல்வன் எழுதின ‘வெயிலோடு போய்’ கதையிலேயே இருந்திச்சி. கதைப்படி அவ கிணறு பின்னாடி ஒளிஞ்சிக்குவா. நாங்க எடுத்த இடத்துல கிணறு இல்லாததால, தொட்டி பின்னாடி ஒளியிறதா வச்சோம். கதையில அந்த இடத்தை படிக்கிறப்பவே என்னை ரொம்ப பாதிச்சது. இந்த காட்சியை நான் திருவானந்தபுரத்துல வச்சி பார்வதிகிட்ட சொல்றேன்.. இப்படி அவ ஒளிஞ்சிருக்கா.. அவளோட சேலையோட ஒரு சிறு பகுதி மட்டும் வெளிய தெரியுது… இப்போ அந்த காட்சியை நினைச்சாலும் எனக்கு அழுகை வருது.. ஏன்னா அது ஒரு கொடூரமான நிலைமை ஒரு பொண்ணுக்கு. ரெண்டு தடவ இந்த காட்சியை நான் அவங்ககிட்ட சொல்ல முயற்சி பண்ணியும் என்னால முழுசா சொல்ல முடியல. அதை கவனிச்ச பார்வதி, “இல்ல சார்.. நீங்க சொல்ல வேணாம்.. நான் கண்டிப்பா படம் பண்றேன்”ன்னு சொல்லிட்டாங்க. என்னை அந்தளவுக்கு அந்த காட்சியை சொல்லும்போதே தொந்தரவு செஞ்சது. அதே தொந்தரவை பார்க்குறவங்களும் உணரவைக்கணும்ங்கிறதுதானே ஒரு கலைஞனோட வேலை. அதனால எந்த இடத்துலயும் இதை நான் கம்மி பண்ணனும்னு எல்லாம் நினைக்கவே இல்ல. அந்த காட்சியை இன்னும் மெருகாக்க, மாரி தொட்டி பின்னாடி ஒளிஞ்சிட்டு இருக்குறப்போ, தங்கராசுக்கு தெரியக்கூடாதுன்னு தன்னோட சேலையை உள்ள உள்ள இழுக்கிற மாதிரி வைக்கிறேன். ஆக ஆடியன்ஸோட மனசை பாதிக்கலன்னா, தொந்தரவு பண்ணலன்னா இப்போ அதை பத்தி உக்காந்து நாம பேசிக்கிட்டிருக்க மாட்டோம்ல.. அது உலுக்கலன்னா படம் முடிஞ்சி வெளிய போறப்போ எதுவும் நினைவிருக்காது. பண்றதுன்னா எப்படி வேணும்னாலும் படம் பண்ணிட்டு போயிறலாம்ங்க. ஆனா ஒரு ரெண்டு இடத்துலயாவது பார்க்குறவங்க திக்கித்து நிக்கணும்.. ஒரு கனத்த மவுனத்தோட தியேட்டரை விட்டு வெளிய வரணும்.. அப்படி படங்கள் பண்றதைதான் நான் விரும்புறேன். எதையாவது எடுத்துட்டு 100 கோடி வசூல், 200 கோடி வசூல்ன்னு சொல்றதுல எனக்கு உடன்பாடில்ல. நல்லதா ஒரு படம் எடுத்து, அது 20 கோடி வருதா, 10 கோடி வருதா, இல்ல அஞ்சி கோடிதானா.. பரவாயில்ல. ஆனா படத்தை பத்தி ஒரு அஞ்சி வருஷமாவது பேசணும்.
எனக்கு சோசியல் மீடியால ஒரு நண்பர் இருக்காரு. நாங்க எப்பவாவதுதான் பேசிப்போம். இதுவரைக்கும் நேர்ல கூட சந்திச்சதில்லை. எங்க ரெண்டு பேருக்குமான பொதுவான ரசனைகள்ல முக்கியமானது உங்களோட படங்கள். உங்க ஒவ்வொரு படமும் வர்றப்போ நாங்க தவறாம தொலைபேசியில பேசிப்போம். உங்களோட படங்கள் இதுவரை சந்தித்திராத இருவரை இணைக்கிற பாலமா இருக்குங்கிறதை இங்க நான் பதிவு பண்ணிக்கிறேன் சார்.
ரொம்ப நன்றி.
இப்போ பூ படத்தை பத்து பேசுறப்போ அது ஒரு சிறுகதையில இருந்து எடுக்கப்பட்ட கதைன்னு பார்த்தோம். உங்களோட முதல் கதையை நீங்க ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் கிட்ட சொன்னப்போ, “இது ரொம்ப இலக்கியத்தரமான கதையா இருக்கு.. சினிமாவுக்கு சரிவருமான்னு தெரியல” அப்படின்னு அவர் சொன்னதாவும் நீங்க ஏற்கனவே பதிவு பண்ணி இருக்கீங்க. இது ஒரு பக்கம். பெரும்பாலும் சிறுகதைகள்தான் மிக நல்ல திரைப்படமா உருவாகுறதை ஏற்கனவே பல உதாரணங்கள் மூலமா பார்த்திருக்கோம். நாவல்கள் அப்படி வெற்றிகரமான சினிமாவா ஆனதை விரல் விட்டு எண்ணிறலாம். இந்த இலக்கியத்துக்கும், சினிமாவுக்குமான இடைவெளி இருந்துக்கிட்டேதான் இருக்குமா? நீங்களே ஒரு எழுத்தாளரும் கூட அப்டிங்கிறதால இந்த கேள்விக்கு நீங்க பதில் சொல்றது பொருத்தமா இருக்கும் சார்.
சசி – கண்டிப்பா அந்த இடைவெளி இருக்கும். இருக்கிறதால தப்பும் இல்ல. ஏன்னா அது வேற மீடியம் இது வேற மீடியம். பாலு மகேந்திரா ஒன்னு சொல்வாரு.. இப்போ இலக்கியத்துல இருந்து ஒரு கதையை நான் வாங்குறேன்னா.. அது ஒரு பூமாலை மாதிரி. வாங்கி அதை நான் அப்படியே உதிர்த்திருவேன் மொத்தமா. மாலையில இருந்த அத்தனை பூவும் தனித்தனியா விழுந்திரும். ஆனா அந்த பூ கட்டியிருந்த நாறு அப்படியே முழுமையா இருக்கும். இப்போ நான் திரும்ப ஒவ்வொரு பூவா எடுத்து மாலை கட்டுவேன். ஆனா அந்த மாலையை நான் அதே நாறுலதான் கட்டியாகணும்.
அற்புதமான உதாரணம் சார் இது.
இதைத்தான் நான் எனக்கான உதாரணமா எடுத்துக்கிறேன். எனக்கு தெரிஞ்சி, ஒரு சிறுகதையில இருந்து திரைப்படமான படைப்புகள்ல, அந்த கதையை எழுதுன படைப்பாளிக்கு முழு திருப்தி தந்த படம்னா அது பூவாகத்தான் இருக்கும்.
நிச்சயமா அதை நான் ஏத்துக்கிறேன். இலக்கியமும், திரைப்படமும் சந்திக்கிற திருப்தியான அந்த புள்ளி தர்ற சந்தோசமே வேற. அது நிறைய நிகழணும்ங்கிற நப்பாசை எப்பவுமே உண்டு. இன்னொன்னு ரொம்ப நாளா உங்க படங்களை பத்தி யோசிக்கிறப்போ எல்லாம் வர்ற கேள்வி ஒன்னு இருக்கு. நீங்க உங்க படங்களுக்கு இசையமைப்பாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறீங்க? ஏன்னா எல்லா படங்கள்லயுமே புது இசையமைப்பாளர்தான் போடுறீங்க. விஜய் ஆண்டனி மட்டும் ரெண்டு படம் பண்ணி இருக்காரு உங்களுக்கு. ஜி.வி. பிரகாஷ் நடிச்ச படத்துல கூட அவர் இசை இல்ல. இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா.. நன்கு பரிச்சயமான இசையமைப்பாளர்களோட ஏன் நீங்க இன்னும் அதிகமா பணிபுரியல?
இதை நானும் யோசிச்சிருக்கேன். முதல் பிரச்சினை அவங்க கேட்குற சம்பளம் என்னோட பட்ஜெட்டுக்கு ஒத்துவராம போயிருக்கும். ரெண்டாவது புது இசையமைப்பாளர்கள் உபயோகிக்கிறது எனக்கு ரொம்ப வசதியா ஆக்கிக்கிட்டேன். நினைச்ச நேரத்துல, தோணும்போதெல்லாம் மாத்தி மாத்தி இசை கேட்டு கேட்டு வாங்கிக்குவேன். ஆனா நல்லா அறிமுகமான இசையமைப்பாளர்கள்கிட்ட பணிபுரியும் வர்ற சிக்கல் என்னன்னா, அவங்ககிட்ட ஒரு லெவல் வரைக்கும்தான் போகமுடியும். அதேநேரத்துல எனக்கு ஏற்கனவே பரிச்சயமான இசையமைப்பாளர்கள்கிட்ட வேலை செய்யணும்னு நிறைய ஆசை இருக்கு. ஏன்னா இப்போ எல்லாத்தையும் நானே தூக்கி சுமக்கிற மாதிரி இருக்கு. அது போதும்னு தோணுது. அதனால அடுத்து பண்றப்போ பரிச்சயமான ஒருத்தர் கிட்டயே போகலாம்னுதான் இருக்கேன்.
பூ, நூறு சாமி ரெண்டுமே இந்திய சமூகத்தோட அப்பட்டமான பிரதிபலிப்பு…
அதுக்கு எதிரான பிரதிபலிப்பும்னும் இத சொல்லலாம்..
அதுவும் சரிதான். பூ, நூறு சாமி ரெண்டுலயுமே சொல்லப்படுற கதைகள் வெளிநாடுகள்ல ரொம்ப இயல்பான நிகழ்வு. ஆனா இதை நாம இங்க படத்துல சொல்றப்போ கூட, “ஓ இப்படியெல்லாம் பண்ணலாமோ” அப்படின்னு நினைக்கிற அளவுக்குதான் நம்ம சமூகம் இருக்கு.
ஜெயமோகன் ஒன்னு சொல்வாரு “உண்மையை சொன்னவுடன் மனது மகிழ்ந்து போகுமளவுக்கு சமூகம் சீர்கெட்டிருக்கிறது”ன்னு. அதுதான் இங்கயும் நடக்குது.
நூத்துக்கு நூறு உண்மை சார். எனக்கு என்னன்னா நம்ம சமூகத்துக்கும், வெளிநாடுகளுக்குமான இந்த இடைவெளி என்னைக்காவது உங்களை பயமுறுத்தி இருக்கா?
ஆமாங்க. உதாரணத்துக்கு, ஒரு செவ்வாய்க்கிழமை நீங்க சென்னை வந்தீங்கன்னா, வழக்கமா இருக்கிற கூட்டத்தை விட ஒரு 30% கூட்டம் சாலையில கம்மியா இருக்கும். ரொம்ப குறிப்பா தி.நகர் போற சாலையில. தி.நகர்லதான் எல்லா விசேஷத்துக்கும் உண்டான பொருட்கள் ஒரே இடத்துல மொத்தமா வாங்கலாம். ஏன் செவ்வாய்க்கிழமை கூட்டம் இல்லன்னா, அன்னைக்கி நல்லநாள் இல்ல.. அன்னக்கி ஒரு விசேஷத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குனா அது விளங்காதுங்கிற மனநிலை. இந்த 2026லயும் இப்படியான மனநிலை கொண்ட மக்கள் இருக்கிறப்போ, என்ன மாதிரியான படங்கள் நாம பண்ணனும்னு யோசிப்பேன். யாருக்காக நாம படம் பண்ணுறோம்ங்கிற யோசனை அது. இந்த கட்சிக்கு ஓட்டு போட்டா நல்ல இருக்குமேன்னு நாம நினைக்கிறோம்.. ஆனா மக்கள் இன்னொரு கட்சிக்கு போடுறாங்க. இப்படி ஒரு படம் வருதே.. அந்தப்படத்தோட ஸ்டேண்டர்ட் என்ன.. இவ்ளோ கோடி வசூல் பண்ணுதே, அதோட ஸ்டாண்டர்ட் என்ன.. இதை ஏன் மக்கள் விரும்புறாங்கனு தொடர்ச்சியா நமக்குள்ள கேட்டு கேட்டு கத்துக்கிட்டே இருக்கவேண்டியதா இருக்கு. இதுக்கெல்லாம் வருத்தப்பட முடியாது. இதுக்கு நாம காரணம்னா நாம காரணம்.. நம்ம அப்பா அம்மா காரணம்னா அப்பா அம்மா காரணம்.. ஆட்சியாளர்கள் காரணமா.. ஆமா அவங்கதான் காரணம்.. ஆக இதுக்கு வருத்தப்பட்டுட்டு இருக்கமுடியாது. இருக்கிற இந்த சூழலுக்குள்ள எதுக்கு எப்படி நன்மை பண்றது.. இந்த மனநிலையிலதான் மக்கள் இருக்காங்க.. ஆனா இதை மட்டுமே அவங்க விரும்பிட்டிருக்க மாட்டாங்க.. Ingmar Bergman ஒன்னு சொல்வாரு.. “ஒரு கலைஞன் அல்லது படைப்பாளி என்பவன் பன்றியை போன்றவன். அவன் உருளைக்கிழங்கையும் உண்பான். மலத்தையும் உண்பான். அவன் என்ன உண்ணப்போகிறான் என்பதை வைத்தே அவன் யாரென்று தீர்மானிக்க இயலும்” அப்படினு.
இந்த சமூகத்துல நம்ம கடமை என்னங்கிறதை இதைவிட எளிமையா சொல்ல முடியாது சார்…
அப்போ எந்த மாதிரியான சமூகத்துக்கு நாம படம் பண்ணுறோம்ங்கிற புரிதல் படைப்பாளிக்கு இருக்கனும். இப்போ வெளிநாட்டுக்கு போயி நூறு சாமி படத்தை போட்டு காட்டுனா, “ டேய் யாருடா நீங்க.. உங்களுக்கு என்ன பிரச்சினை.. அந்த பொண்ணு இன்னொரு கல்யாணம் பண்ணணும்னுதான சொல்லுது.. அந்த பொண்ணு ஒருத்தரை தன்னோட துணையா தேர்ந்தெடுத்தா பக்கத்து வீட்டுக்காரனுக்கு என்ன பிரச்சினை.. அவளோட அண்ணனுக்கு என்ன பிரச்சினை.. இதெல்லாம் ;வெளிநாட்டுல இருக்குறவங்களுக்கு புரியாது.
அப்படின்னா இப்போ கான் மாதிரியான விழாக்கள்ல நூறு சாமி மாதிரி ஒரு பிராந்தியத்தோட பிரச்சினையை பேசுற படங்கள் எடுபடுமா சார்? உதாரணத்துக்கு ஆடுகளம் ஈகோ அப்படிங்கிற உலகளாவிய ஒரு விஷயத்தை பேசிச்சி. ஈரானிய படமான சில்ரன் ஆப் ஹெவன் பேசுறது வறுமையையும், அதைமீறி அந்த குழந்தைகளுக்குள்ளான நம்பிக்கையையும்.
சசி – நூறு சாமி புரியாம போகாது. “இப்படியெல்லாம் பிரச்சினை இருக்காடா இந்தியால..”ன்னு அவங்க அதை எடுத்துப்பாங்கன்னுதான் சொல்றேன்.ஒரு பெண் மறுதிருமணம் செய்யணும்னு இந்தியால நினைச்சா தன் குடும்பத்தார்கிட்ட இருந்து, அவள் வாழுற சமூகத்துக்கிட்ட இருந்து இத்தனை கேள்விகளை, பிரச்சினைகளை எதிர்கொள்ற அளவு அந்த சமூகம் இருக்காங்கிற கேள்விதான் அவங்களுக்கு முதல்ல தோணும்னு சொல்றேன். ஏன் இவ்ளோ பின்தங்கி இருக்காங்கங்கிற ஒரு எதிர்மறையான கேள்வி அவங்களுக்குள்ள எழும்ன்னு சொல்றேன். இதை பார்த்து அவன் நெகட்டிவா நினைக்கலாம். பயப்படலாம். ஆனா நான் பயப்படமாட்டேன். ஏன்னா எதனால பெண்கள் இப்படி இருக்காங்கன்னு எனக்கு தெரியும். யார் இதை உண்டாக்கி வச்சாங்கன்னு எனக்கு தெரியும். எதனால இத்தனை நூற்றாண்டா இது தொடர்ச்சியா இங்க இருந்துட்டே இருக்குன்னும் தெரியும். அதுக்கு எதிரான குரல் தர்றத பத்தியும், எந்தமாதிரி அழுத்தமா அதை பேசணும், எந்த கட்சிக்கு ஓட்டு போட்டா அது மாறும்ங்கிறதைதான் ஒரு படைப்பாளியா நான் பேசமுடியும்.
இதுகூடவே இன்னொரு கேள்வியும் தோணுது சார். இப்போ பூ, நூறு சாமி ரெண்டுமே கிராமத்துல நடக்குற கதை. அதுவும் அழுத்தமா சொல்லப்பட்ட கதைகள். இதனால என்னாகுதுன்னா, இதெல்லாம் கிராமத்து சைடுல இருக்குற பிரச்சினைதான்.. நகரத்துல எல்லாமே சுபிட்சமா இருக்குங்கிற ஒரு எண்ணம், அதாவது சிட்டியில எங்க சார் சாதி எல்லாம் பார்க்குறாங்க அப்படிங்கிற மாதிரியான ஒரு எண்ணம் வந்திருமோ?
சிட்டியில நடக்குற மாதிரி எடுத்திருந்தா “ஏங்க சிட்டியில அங்கொன்னும் இங்கொன்னுமா எப்பவாவது நடக்கும்ங்க.. இதெல்லாமா பேசிக்கிட்டு”ன்னு சொல்லியிருப்பாங்க. இது ஒருபக்கம். அதுபோக,பூ, நூறு சாமி ரெண்டுமே உண்மைக்கதைங்கிறதால, நான் அவங்களோட கதையை,அவங்களோட மண்ணை அடிப்படையா வச்சுதான் சொல்ல வேண்டியிருக்கு. சொல்லப்போனா உண்மையான கதை எங்க நடந்ததோ அந்த வீட்டுக்கு பக்கத்துல, என்னோட நடைமுறை வசதிக்காக செட் போட்டு எடுத்தேன். உண்மையை ஒட்டி எடுக்கணும்ங்கிறதுக்காக கிராமத்துல நடக்குற மாதிரி எடுக்கவேண்டியதா போச்சே தவிர நகரத்துல இது நிகழாதுன்னு இல்ல.
புரிஞ்சது சார்.. எதுக்காக இதை கேட்டேன்னா, எதிர்காலத்துல வாய்ப்பிருந்தா எங்கயாவது ஒரு இடத்துல,”இது நகரத்துலயும் அப்படித்தான்”னு பதிவு பண்ண உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சா அதை பண்ணிருங்கன்னு சொல்லத்தான்.
புரியுதுங்க எனக்கு. ஒரு 39 வயது ஆண்.. மனைவியை இழந்தவர் அவரு. அவர் தெருவுல வரும்போது, காலையில கோலம் போட்டுட்டிருந்த ஒரு அம்மா எந்திரிச்சி உள்ள போயிட்டாங்களாம். அதாவது ஒரு ஆண் வாழாவெட்டியை ஒரு சுமங்கலி பொண்ணு பார்க்குறதில்ல.
ஆண் வாழாவெட்டி.. நல்ல வார்த்தை.
அப்போ எங்க பிரச்சினை? சுமங்கலிங்கிற வார்த்தையிலதான் பிரச்சினை.
இந்த இடத்துல ஒரு சம்பவம் சொல்லணும்னு தோணுது.. என்னோட நண்பர் ஒருத்தர் அவங்கம்மா, அம்மா வழி பாட்டி ரெண்டு பேர்கூடவும் சேர்ந்து நூறு சாமி படத்துக்கு போனாரு. அவங்கம்மாவோட கணவர் இறந்து 22 வருஷம் மேல ஆச்சி. படம் முடிஞ்சது. முடிஞ்சதும் அந்த அம்மா, பக்கத்துல இருந்த பாட்டியை திரும்பி பார்த்திருக்காங்க. அந்த பாட்டி, “என்ன படம் எடுத்திருக்கான்.. எனக்கு பிடிக்கவே இல்ல.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க..” அப்படினு கேட்டுருக்காங்க. எனக்கு தெரிஞ்சி இந்தப்படம் அந்த அம்மாவை விட, அந்த பாட்டியைத்தான் அதிகமா பாதிச்சிருக்கும்னு தோணுது. அதை அவங்க உணர்ந்திருப்பாங்க. அதோட வீச்சு தாங்காமாதான் படம் பிடிக்கலைன்னு சொன்னாங்கன்னு தோணுது.
நிச்சயமா வாய்ப்பு இருக்கு.
பிச்சைக்காரன், நூறு சாமி ரெண்டு படத்துலயும் அம்மா கதாபாத்திரங்களை பார்த்தா, அவங்க வாழ்க்கையோட மொத்த பகுதியையும் தங்களோட பிள்ளைகளுக்காக செலவிடுற, வாழுற மனநிலையிலதான் இருக்கிறதா காட்டியிருப்பீங்க. இதை திரையில காட்டுறப்போ அவங்க தங்களோட குழந்தைகளை வளர்க்குறதுல காட்டுற அந்த ஆர்வம் Desperateஆ இல்லாத மாதிரி காட்டுறதுக்கு எவ்வளவு மெனக்கெடல் தேவைப்பட்டிச்சி?
நீங்க சொன்ன ரெண்டு படத்துலயுமே அவங்க ரெண்டு பேருமே மிக நல்ல அம்மாக்கள் அப்படின்னு சொல்லவேண்டிய, நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்படி ஒரு நல்ல அம்மாவுக்கு இப்படி ஆயிருச்சுங்க.. இப்ப அவங்களோட பையன் என்ன பண்றான் பாருங்கன்னு காட்ட வேண்டியதா இருந்திச்சி. அப்படி நான் காமிக்கலைன்னா இந்த பொதுவான ஆடியன்ஸ் அதாவது இந்த செவ்வாய்க்கிழமை பொருள் வாங்க போகமாட்டேன்னு இருக்கிற ஆடியன்ஸுக்கு இது ஏறாது. ஏன்னா அவங்க காலம் காலமா பார்த்துட்டு வர்ற சினிமா அப்படி. இப்போ யாருக்கு நாம இதை சொல்லப்போறோம்ங்கிற புரிதலோடதான் நாம இதை எழுதணும். ஒரு சாதாரண போக்குவரத்து விதிகளை அவங்க மதிக்க மாட்டேங்குறாங்க. அவங்களுக்கு தெரியும் விதிமுறைகள் இருக்குன்னு. ஆனாலும் குற்ற உணர்ச்சி இல்லாம அதை மீறுறாங்க. சமூகம் அப்படி பழக்கப்படுத்தி இருக்கு. அதை யார் முறைப்படுத்தனும்.. இது தப்புன்னு தொடர்ந்து புரிய வச்சிட்டே இருக்கனும்.. அரசாங்கம்தானே? ஆனா அந்த அரசாங்கம் என்ன பண்ணுது.. இப்படி நிறைய குழப்பமான கேள்விகள் இதுல இருக்கு. ஒரு முரண்பட்ட, முன்னேறாத சமூகத்துக்கு ஒரு கதையை சொல்லும்போது நாம இப்படித்தான் சொல்லவேண்டியதா இருக்கு. இல்லன்னா முதவாரத்துலயே என் படம் உள்ள போயிரும்.
பாரதிராஜா இயக்கின பசும்பொன் படத்தோட கருவும் கூட நூறு சாமி மாதிரிதான். ரெண்டாவது திருமணம் பண்ணிக்கிட்ட தன்னோட அம்மாவை வெறுக்குற பிரபு கதாபாத்திரம். 1995-ல வந்தது அந்தப்படம். இப்பவும் நூறு சாமி எடுக்குறதுக்கான அவசியம் இருக்கு. அதுவே மிரட்சியா இருக்கு எனக்கு.
பசும்பொன்ல முதல்பாதியிலேயே பிரபு ஒத்துக்குவாரு. இப்போ அதை நான் பண்றப்போ, “இது ஏன் நிகழணும்.. இது ஏன் அவசியம்.. இப்படியும் பசங்க இருக்காங்க.. நாம அதை ஏன் பின்தொடரணும்ங்கிற முன்மாதிரியான ஒரு திரைக்கதை அமைச்சிருந்தேன். அதுக்காகத்தான் இந்த மாதிரியான ட்ரீட்மெண்ட். எங்கயும் நெகட்டிவா தெரியக்கூடாதுங்கிற முனைப்போட அமைந்த ட்ரீட்மெண்ட். உங்க அம்மாவுக்கு கல்யாணம் ஆகுறதால ஒன்னும் நடக்க போறதில்ல.. இப்போ மூணு இலையில சாப்பாடு போட்டு ஒன்னா உக்காந்து சாப்பிடுற நீங்க, அம்மாவுக்கு கல்யாணம் ஆனா நாலு இலையில ஒண்ணா உக்காந்து சாப்பிடப்போறீங்க.. அவ்ளோதான்டான்னு சொல்ற விஷயம் இது.
சோசியல் மீடியாவோட வளர்ச்சி நாளுக்கு நாள் அதீதமா ஆகிட்டே இருக்கு. தொடர்ந்து நாம கவனிச்சிட்டே இருந்தாலும் கூட, இந்த அசுர வளர்ச்சி மிரள வைக்குது. ஏன்னா நேத்து இருந்தது இன்னைக்கு இல்லங்கிற வேகத்துல அது நிகழுது. இந்த வேகம் உங்களோட எழுதுற அந்த ப்ராஸஸ எப்படி பாதிக்குது.. அதுல இருக்குற பாசிட்டிவ்,நெகடிவ் என்னன்னு நீங்க நினைக்கிறீங்க.
இதை கவனிக்கிறதுதான் இப்போ நான் பண்ற முதல் விஷயம். அவனுக்கு பவழமல்லி .பிடிக்குதா. அதை உக்காந்து அம்பது தடவ கேளு.. அவனுக்கு ஏன் இது பிடிக்குது.. அதுல என்ன நுவான்ஸ் இருக்கு.. அந்த பாட்டுக்கும் நூறு சாமி பாட்டுக்கும் என்னென்ன வித்தியாசம் இருக்குது.. இது எல்லாத்தையும் கவனிச்சிட்டு, யோசிச்சிட்டு இதுக்கு 50%வாவது நாம அடாப்ட் பண்ணிக்கலன்னா பொழைக்கவே முடியாது. இப்போ நூறு சாமி படத்துலயே அந்த ரெண்டாவது பையனோட காதல் காட்சிகளை எடுத்துக்கிட்டா, முதல்ல அது வேற மாதிரி இருந்திச்சி. இப்போ அந்த பொண்ணோட அம்மாவுக்கு இவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறது தெரியவரணும். இதுதான் காட்சி. இதை முதல்ல, அந்தப்பொண்ணு வீட்டுல உக்காந்து மஹேஸ்வரி மஹேஸ்வரின்னு சொல்லி போன்ல பேசுற மாதிரியும், அதை கவனிச்ச அவங்கம்மா ‘யார்ட்ட பேசுற’ன்னு கேட்க, மஹேஸ்கிட்டம்மா.. என் ப்ரெண்ட்.. பாடத்துல சந்தேகம் கேட்குறேன்மான்னு சொல்ற மாதிரியும் காட்சி வச்சிருந்தேன். இதுவே அவங்கம்மாவுக்கு சந்தேகம் வர போதுமானது. ஆனா நான் படத்துல அந்தக்காட்சியை வைக்காம, அவங்க ரெண்டு பேரும் ஒரே பேருந்துல, ஒரே பெர்த்துல இருக்குற மாதிரி காட்சி வச்சி, அந்த பொண்ணோட அம்மா மேல்மருவத்தூர் போயிட்டு அதே பேருந்துல வர்ற மாதிரியும், அப்போ அவங்க செருப்புகளை பார்க்குற மாதிரியும் வைக்கிறேன். முதல்ல எழுதுன போன்ல பேசுற காட்சி ரொம்ப பழசுன்னு எனக்கு தோணுது. அதனால இப்படி ஒரு காட்சியை நான் வைக்கிறேன். அதுபோக அந்த பேருந்து காட்சியெல்லாம் வச்சா செலவும் கொஞ்சம் அதிகமாகும். ஆனாலும் ரெண்டாவதைதான் நான் வைக்கிறேன். எது புதுசு.. எது புதுசுங்கிற அந்த யோசனையோட தாக்கத்தால இது நிகழுது. அதேமாதிரி இதை எந்த வேகத்துல சொல்லணும்,எந்த ட்ரெண்ட்ல இவங்க இருக்காங்க.. எந்த மூடுல இருக்காங்கன்னு எல்லாம் யோசிச்சி அதை வைக்கிறேன். ஏன் இந்த தலைமுறை தியேட்டருக்கு இப்படி படங்கள் பார்க்க வர்றதில்லைங்கிற யோசனையோட இதை நான் வைக்கிறேன். இல்லைன்னா நான் மார்க்கட்ல இருந்து வெளிய போயிருவேன்.
இப்போ நீங்க சொன்னது, நீங்க அதுக்கேத்த மாதிரி மாறுறது எல்லாம் பாசிட்டிவான விஷயங்கள். நெகட்டிவ் என்னென்ன?
நெகட்டிவ் அப்படின்னா, என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ..எப்படி வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனா படம் முழுக்க ஜாலியா இருக்க வச்சிட்டு, கடைசி பத்து நிமிஷத்துல ஒரு மெசேஜ் சொன்னா போதும்… நான் படத்தை ஹிட் ஆக்கிருவேன்னு ஒரு சூழல் நிலவுது. இது கொஞ்சம் நெகட்டிவா தோணுது. இது ஒருபக்கம் உண்மையாவே இருந்தாலும் கூட, நாம நேர்மையா ஒரு விஷயத்தை சொன்னா அவங்க ஒத்துக்குறாங்க சார். எல்லாருக்குமே மனசுன்னு ஒன்னு இருக்கு. அதை அவனோட மொழியில எப்படி தொடணும்னுதான் நாம கத்துக்கணும். மத்தபடி நெகட்டிவ் இருக்குன்னு யோசிக்கிறதுக்கு பதிலா, அவங்க இடத்துல நாம இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்க பழகிட்டேன். அவங்ககிட்ட ஒரு நல்ல விஷயத்தை சொல்லி எப்படி பேர் வாங்குறதுன்னு மட்டுந்தான் யோசிக்கிறேன். நான் அவங்களை பின்தொடர்றேன். அதுதான் முக்கியம்.அதோட ரிசல்ட் அதுவே வரும். அவங்களை பின்தொடரும்போதே அவங்க எங்க இடறுறாங்கன்னு கவனிச்சு அதுக்கேத்த படங்கள் பண்ணனும். நாம ஒரு உலகத்துல பிறந்து வளர்ந்தோம். அவங்க உலகம் வேற. இது ரெண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிஞ்சிட்டு பண்ணனும். நான் என்ன நினைக்கிறானோ அதைத்தான் நான் படமா சொல்லப்போறேன்.. ஆனா அதை அவங்க மொழியில சொல்லணும். அவ்ளோதான்.
இப்போ நூறு கோடி வானவில் படம் பண்ணி முடிச்சி நாலஞ்சி வருஷம் ஆச்சி. அது இப்போ இருக்குற ட்ரெண்டுக்கு, மனநிலைக்கு ஒத்துவரும்னு நம்பிக்கை இருக்கா சார்?
நான் எப்பவுமே ஒரு அஞ்சி வருசத்துக்காவது தாங்குற மாதிரிதான் படம் எடுப்பேன். அதனால அது ஒரு பிரச்னையில்லை. நூறு கோடி வானவில் படத்தோட கதையும் அப்படியான ஒன்னுதான். அடிப்படை ஆதாரமான உணர்வுகள் எப்போ சொன்னாலும் எடுபடும். அதை எப்படி சொல்றோம்னுதான் முக்கியம்.
என் வாழ்க்கையோட முக்கியமான தருணங்கள்ல ஒன்னா இப்போ நம்ம பேசுன இந்த ஒரு மணி நேரத்தை நான் எப்பவுமே நினைவில் வச்சிப்பேன் சார். ஏன்னா இந்த உரையாடல் என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. ரொம்ப நன்றி சார் உங்க நேரத்தை தந்ததுக்கு.











