நாராயணி கண்ணகி
99 சதவீத திரைப்பட இயக்குநர்கள் திரையைப் பிய்த்துக் கொட்டும் என்று அதிர்ஷ்டத்தையும், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் கதைச் சொன்னால் பெரிய நட்சத்திரத்தின் கால்சீட் கிடைக்கும் என்றும், குருப்பெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாம் தலைக்கீழாக மாறிவிடும் என்று ஜாதகத்தையும், தாயத்து கட்டிக் கொண்டால் தயாரிப்பாளர் தேடி வருவார் என்று பரிகாரத்தையும், கடவுள் ‘ஒருவரால்’ மட்டுமே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்று ‘எண்ணற்ற’ கடவுள்களையும் நம்புகிறார்கள். அதிர்ஷ்டம், ஜாதகம், பரிகாரம், பக்தி நான்கும் நான்கு மூலைகள்! அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் புத்திசாலித்தனம்! திரைத்துறையில் நன்கு பழுத்த ஆன்மீக வாதிகளும் ஜெயித்து இருக்கிறார்கள். நன்கு காய்த்த பகுத்தறிவாளர்களும் சாதித்து இருக்கிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் காலத்தை கடந்தும் நிற்கின்றன. ஆனால் வசூலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே பொதுவான விருப்பமாக இருக்கும்.
சில இயக்குனர்களிடம் கதை விவாதத்திற்கு போனோம் என்றால் நெற்றியில் திருநீறு குங்குமம் அணிந்து போக வேண்டும். ஏதோ ஒரு பிரசித்தி பெற்ற கோயிலின் (பேரைச் சொல்லி) பிரசாதம் கொண்டு போய் தரவேண்டும். அன்றைய மாலை வரைக்குமான காபந்திற்கு உதவும்.
என்னை மாதிரி சென்னையில் தங்காமல் ஊரிலிருந்து வரும் எழுத்தாளராக இருந்தால் கடையில் வாங்கின ஏதோ ஒரு இனிப்புப் பலகாரத்தை பாக்ஸில் போட்டுகொண்டு போய் வீட்டில் செஞ்சது என்று தரவேண்டும். பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகிறதோ, இல்லையோ ஆபிஸில் பாக்ஸ் ஹிட்டாகி விடும்.
கண்டிப்பாக சுவையான பலகாரமாய் வாங்கி போக வேண்டும். அப்போதுதான் ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும். ஆரம்பம் மட்டுமாவது…
எழுத்தாளர் வெறும் திறமையை மட்டுமே எடுத்துக் கொண்டு போனால் அங்கே புல்லுக் கூட முளைக்காது. ஆமா,
இயக்குனர் உங்களை ஸ்பெஷலாக, வசதியாக உட்கார வைத்து.. அதென்ன உட்காரவைப்பில் ஸ்பெஷல் என்கிறீர்களா? ஒரு மொக்க சஸ்பென்ஸ் இருக்கட்டுமே அப்புறம் சொல்றேன், தெரிஞ்சுக்கலைன்னா தூக்கம் வராதா? டிஸ்கசன்ல தூக்கம் வரவே கூடாது.
இயக்குனர் கதை சொல்வதற்கு முன்பு குல தெய்வத்தை வேண்டிக் கொள்வார். கதை சொல்வதற்கு முன்பே உங்கள் முகம் பிரகாசம் கொள்ள வேண்டும். தயவு செய்து முகத்தில் எந்த ரியாக்சனும் கொண்டு வர முடியாத கல்லழகர்கள் பஞ்சாயத்தில் சேர வேண்டாம்.
முதல் ஸீன் சொல்லும் போதே “சூப்பர் சூப்பர்” என்று அடித்து தூக்க வேண்டும். எந்த இயக்குனராக இருந்தாலும் முதல் ஸீன் சூப்பராகத்தான் புட்ச்சிருப்பார். ஸீன் புட்சதுக்கு அப்புறமாதான் ஸ்டோரியைப் புடிப்பார்.
தொடர்ந்து அவர் ஸீன் பந்தை வீசும் வீச இப்போது முகநூலில் கமெண்ட் இடுகிறார்களே அப்படி பாவ புண்ணியம் பார்க்காமல்
ஆஹா
செம
அருமை
குட்
சான்ஸ இல்ல
போன்ற சங்குகளை ஊதிக்கொண்டே இருக்க வேண்டும்.
முதல் ஸீன் பிடிக்கும் வித்தைகளை அப்புறம் பாக்கலாம். முதலில் ஒரு கதையைப் (கதை மாதிரியாக வேணும்) பிடிக்கும் சூட்சுமத்தை கெட்டியாக பிடிப்போம்.
ஆயிரம் கோடி வசூலித்த ஆங்கிலப் படங்களைப் பார்த்து விட்டு அதுபோலவே படமெடுக்கும் இராஜபேராசைகளை கைவிட்டு விடுவோம். நாம் இன்னும் அவதார் போன்ற படங்களைத் தயாரிக்கும் அளவிற்கு தயாரிப்பாளர்கள் தயாராகவில்லை.
தமிழில் வந்த சில திரைப்படங்களின் கதைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். வெறும் மூலக்கதைகள் மட்டுமே தருகிறேன். வாசிக்கும் போதே உங்களுக்கு என்னென்ன படங்கள் என்பது எளிமையாக புரிந்து விடும். மிகச் சாதாரணமாக உருவான கதைப்புள்ளி எப்படி விஸ்தாரமான கோலமானது என்பதை அறிவீர்கள். அடுத்தடுத்த விவரமாகவும் எழுதுவேன்.
நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை! தவம் இருந்து பெற்ற மகன்தான் தேடப்படும் குற்றவாளி என்று தெரிந்ததும், பாசத்தைக் காட்டிலும் கடமைதான் முக்கியம் என்று குற்றவாளி மகனையே என்கவுண்டர் செய்கிறார்.
இதை வேறு மாதிரியாகவும் சொல்லலாம் – நேர்மையான போலீஸ் அதிகாரியின் மகனே தேடப்படும் குற்றவாளி. போலீஸ் அதிகாரி என்ன செய்தார்? மகனை தண்டித்தாரா? அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிக்க வைத்தாரா?
இது அரசர்கள் காலத்து கதை என்பதும் தெரியும்தானே? கன்றின் மீது தேரைச் செலுத்தி கொன்று விடுவான் சோழஅரசனின் மகன். பசுத்தாய் ஆராய்ச்சி மணி அடித்து நீதி கேட்கும். மகன் என்றும் பாராமல் மரண தண்டனை விதித்து நீதியை நிலை நாட்டுவார் மனுநீதிச் சோழ மன்னர்.
வேறொரு படத்தில் அண்ணன் நேர்மையான போலீஸ் அதிகாரி, வீட்டிலேயே அப்பாவி போல் இருக்கும் தம்பி தீவிரவாதி. முடிவு அதேதான்.
இன்னொரு கிராமத்து கதைகள படத்தில் மாமனார் நீதிமான் மருமகன் கொலைக் குற்றவாளி. நேர்மையான மாமனார் மருமகனை போலீசாரிடம் பிடித்து கொடுத்து விடுவார்.
சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர் நாட்டில் நடக்கும் லஞ்சம், ஊழலைக் கண்டு கொதிப்படைகிறார். (திரைப்படத்தில் இந்தக் கொதிப்புகள் சர்வ சாதாரணம்) இதற்காகவா சுதந்திரம் வாங்கினோம் என்று வேதனை அடைகிறார். தனி மனிதராக தவறு செய்பவர்களை கொன்று வருகிறார். கடைசியில் அதே இறுதி காட்சி. மகன் குற்றவாளி என்று தெரிந்ததும். மகனைக் கொல்வது.
நண்பன் என்றும் பாராமல் சுட்டுக் கொல்லும் காவல் அதிகாரி, கணவன் என்றும் பாராமல் கைது செய்யும் போலீஸ் மனைவி, மகன் என்றும் பாராமல் விசம் வைத்துக் கொல்லும் அன்னை.
இப்படி மனு நீதிக் கதைகள் நூறு காட்டிக் கொண்டு போகலாம்.
காதல் கதைகளை பார்ப்போம். ஒரே கதையம்சத்தோடு ஆயிரம் காதல் கதைகள் பட்டியல் போடலாம். கொஞ்சம் வித்தியாசமாகவும், மரபை உடைப்பதாகவும், புதிய முயற்சியாகவும் கொண்ட கதைகளை எடுத்துக் கொள்வோம்.
ஒரு பிராமின் பையனும், கிறிஸ்தவ பெண்ணும் காதலிப்பார்கள். காதலுக்கு மதம் தடை! மதவெறியும், பயங்கர ரவுடித்தனமும் கொண்ட கதாநாயகியின் அண்ணன். ‘எங்கள் காதலுக்கு தடையாக இருப்பது இதுதானே… இனிமேல் இது எங்களுக்கு வேண்டாம்’ என்று பூணூலையும், சிலுவையையும் கழட்டி வீசும் புரட்சிகரமான முடிவு.
கல்லூரியில் படிக்கும் ஒரு இளைஞன், அவனோடு படிக்கும் பெண்ணை உயிருக்கு உயிராக காதலிப்பான். அவள் குடும்பச்சூழல் காரணமாக காதலை ஏற்க மாட்டாள். கல்லூரி முடிந்து கடைசி தினத்தில் அவள் காதலைச் சொல்வதற்கு ஓடி வருவாள். அவன் உயிரோடு இருக்க மாட்டான்.
காதல் தோல்வியால் க்ளைமாக்ஸில் காதலர்கள் தற்கொலைச் செய்து கொண்டு இறந்து போகும் படங்கள் எண்பதுகளில் நிறைய வெளி வந்தன. எந்த சமூக நல அமைப்புகளும் இந்தச் சோகங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
கதாநாயகனான இளைஞனிடம் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் வந்து சேருவாள். அந்தப் பெண்ணை மிகுந்த பாதுகாப்போடு, அன்போடு பார்த்து கொள்வான். அக்கறையானது காதலாக மாறும். அவள் குணம் பெறவேண்டும் என்று மூலிகை வைத்தியரிடம் சேர்ப்பான். குணமடைந்த பிறகு கதாநாயகனை அவளுக்கு அடையாளம் தெரியாமல் போகும், அவனோடு கழித்த பேரன்பு நாட்கள் சுத்தமாக மறந்து விட்டு பெற்றோருடன் போய் விடுவாள்.
கன்னியாஸ்திரியாக மாற இருக்கும் அழகான பெண்ணை அழகான நாயகன் காதலிக்கிறான். காதலுக்கு தூதாக நண்பனை அனுப்பி வைக்கிறான் எதிர்பாராத திருப்பமாக தூது போனவனையே அவள் காதலிக்கிறாள். கடைசியில் அவள் கன்னியாஸ்திரி ஆகவில்லை, காதலித்தவன் பாதிரியார் ஆகிறான்.
கணவனோடு சந்தோசமாக வீதியில் போய்க் கொண்டிருக்கும் ஒருத்தி ஏதேட்சையாக முன்னாள் காதலனை காண்கிறாள். அவன் பைத்தியமாக நினைவு தப்பி இருக்கிறான். அவனை அப்படியே விட்டு விட்டு போகாமல் தங்களோடு அழைத்துக் கொண்டு போகிறார்கள். (ஒரு டூவீலர் மெக்கானிக் பையனும் ஒரு பள்ளி மாணவியும் காதலிக்கிறார்கள். (மைனர் மாணவி காதலிக்கலாமா? என்று யாரும் கேள்வி கேட்கவில்லை ரசித்தார்கள்.) இங்கேயும் மதம் காதலைத் தடுத்து விடுகிறது. அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவனோடு திருமணமாகி விடுகிறது. காதலன் பைத்தியமாகி விடுகிறான்.
இது இன்னொரு காதலன் பைத்தியமாகும் கதை! ஒரு ரவுடி ஆச்சாரமான குடும்பத்து பெண்ணைக் காதலிக்கிறான். சில முரண்பாடுகளைக் கடந்து அவளும் காதல் செய்கிறாள். ரவுடியான காதலனுக்கு எதிரிகளால் தலையில் அடிப்பட்டு விடுகிறது. விளைவு பைத்தியமாகி விடுகிறான். அவனை வைத்தியசாலையில் சேர்க்கிறார்கள். மிகவும் கொடுமையான வைத்தியமாக இருக்கிறது. சிறையில் குற்றவாளி வதைப்படுவதைப் போன்ற கொடுமை! அவன் பூரண குணமாகி விடுகிறான். காதலியோ இறந்து விடுகிறாள். காதலி இல்லாமல் அவனுக்கு ஏது வாழ்வு? பைத்தியம் குணமாகி விட்டாலும் குணமாகாதது போல் பாவனை காட்டி அவன் மீண்டும் அந்த வைத்திய சிறைக்கே செல்கிறான்.
_ஏன், திரும்பத்திரும்ப கதைக் கருக்களையே சொல்லி வருகிறேன்?
சித்திரம் வரைவதற்கு சுவர் வேண்டும். கட்டடம் கட்டுவதற்கு நிலம் வேண்டும். மழைப் பொழிவதற்கு மேகம் வேண்டும். பூக்கள் பூப்பதற்கு செடிகள் வேண்டும். கதைக்கரு என்பது மேடை மேடை நன்றாக இருந்தால் ஆட்டம் ஆடலாம்.
அடிப்படையில் மூலக்கதைகள் ஒரே மாதிரி தெரிந்தாலும் திரைகதையால், கோர்க்கப்படும் காட்சிகளால் வெவ்வேறு படங்களாக மாறி விடுகின்றன.
ஆக்சன் ஹீரோ கதை, ஃபேமிலி சென்டிமென்ட் கதை, பேய்க்கதை (பேயிலேயே சிரிக்க வைக்கும் பேய், பயத்தில் உச்சா போக வைக்கும் பேய்), துப்பறியும் கதை, உண்மை கதை, சரித்திர கதை என்று நிறைய பிரிவுகள் இருக்கின்றன.
எந்தக் கதையாக இருப்பினும் நல்ல ஓப்பனிங் ஸீன், ஹீரோ அறிமுகம், ஹீரோயின் அறிமுகம், ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ தீர்க்க முடியாத பிரச்சினை, அல்லது எதிரியின் தொல்லை உருவாக்க வேண்டும். அதிலிருந்து விடுபட ஹீரோ என்ன செய்கிறான், விடுபட முடியாதபடி வில்லன் என்னென்ன செய்கிறான். முடிவில் ஹீரோ எப்படி ஜெயிக்கிறான். இதனுள்ளே காதல், காமெடி, சென்டிமென்ட் எப்படியெல்லாம் சேர்க்க வேண்டும் என்பதை அடுத்து ஒவ்வொன்றாக பேசுவோம்.











