கா.ரபீக் ராஜா
ஆரம்பகாலத் தமிழ் சினிமாவில் இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நேர்மறையாகச் சித்திரிக்கப்பட்டாலும், அவை சில குறிப்பிட்ட பொதுமைப்படுத்தப்பட்ட வார்ப்புகளுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தன. கலை என்பது சமூகத்தின் கண்ணாடியாகவும், அதே நேரத்தில் தேங்கிப்போன சிந்தனைகளை உடைக்கும் ஒரு கூர்மையான கருவியாகவும் இருக்க வேண்டும்.
அந்த வகையில், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ஹபீபி’ திரைப்படம், சமகாலத் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைப்படைப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஒரு முற்போக்கு இஸ்லாமியரின் பார்வையில் மதக் கோட்பாடுகளுக்கும் மனிதநேயத்திற்கும் இடையே உள்ள உறவை, எவ்வித சமரசமுமின்றிப் பேசும் நேர்த்தியான படைப்பாக இத்திரைப்படம் திகழ்கிறது.
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சித்திரிப்பு என்பது காலம் காலமாகச் சில பொதுப்புத்தி வரம்புகளுக்குள் சுருக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக, இஸ்லாமியர்களின் வாழ்வியல் என்றாலே கறிக்கடை, சாம்பிராணி புகை, அல்லது தீவிரவாதம் என்ற எல்லைகளுக்குள் சினிமா தடம் புரண்டிருந்த சூழலில், அவற்றையெல்லாம் உடைத்தெறியும் ஒரு நல்வரவாக வந்திருக்கிறது இந்த ‘ஹபீபி’.
மத அடையாளங்கள் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளைத் தாண்டி, மனிதர்களுக்கு இடையே நிலவ வேண்டிய பரஸ்பர அன்பையும் புரிதலையும் இப்படம் விரிவாகப் பேசுகிறது. முற்போக்குச் சிந்தனையுடைய ஒருவருக்கு, இஸ்லாம் போதிக்கும் உண்மையான ஆன்மிகம் என்பது மனிதர்களை நேசிப்பதே அன்றி, அவர்களைக் காயப்படுத்துவது அல்ல என்பதை இத்திரைப்படம் மிக ஆழமாக உணர்த்துகிறது.
சமூகத்திற்குள்ளும் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகள், முற்போக்கு எண்ணங்கள் கொண்ட மனிதர்கள், மனிதநேயத்தை மதத்திற்கு மேலாக வைக்கும் சாமானியர்கள் இருக்கிறார்கள் என்பதைப் படம் எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளது. முற்போக்கு இஸ்லாமியப் பார்வையில் பெண்களின் உரிமைகளும் அவர்களின் சுதந்திரமும் மிக முக்கியமானவை. இத்திரைப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் வெறுமனே முக்காடிட்ட, குரலற்ற மனிதர்களாக இல்லாமல், தங்களுக்கான சுயசிந்தனையும், முடிவெடுக்கும் ஆளுமையும் கொண்டவர்களாகக் காட்டப்பட்டிருப்பது ஒரு வரவேற்கத்தக்க முற்போக்கு நகர்வாகும்.
படம் பற்றிய அறிவிப்புகள் வந்தபோதே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான். ஓராண்டிற்கு முன்பே இத்திரைப்படம் குறித்த செய்திகள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டாலும், மனதின் ஓர் ஓரத்தில் சிறிய நெருடல் இருக்கவே செய்தது. படம் வெளியான பிறகு தெரிவிக்கப்படும் வாழ்த்துகளும் அன்பும் வெறும் சம்பிரதாய வார்த்தைகளாகிவிடாமல், ஒரு தரமான படைப்பாக இது இருக்குமா என்ற ஐயம் இருந்தது. ஆனால், அந்த ஐயங்கள் அனைத்தையும் இயக்குநர் தன் அசாத்திய திரைமொழியால் உடைத்தெறிந்திருக்கிறார்.
இஸ்லாமிய வாழ்வியல் சித்திரிப்பு குறித்துச் சமீப காலமாகச் சில ‘அத்தாரிட்டிகள்’ சமூக ஊடகங்களில் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் படம் தொடங்கும்போதே இயக்குநர் வைத்த ஒரு கார்டு மிகச் சிறந்த பதிலடியாக அமைந்தது.
‘எனக்குள் சுமந்து திரிந்த, நான் பார்த்த ஓர் ஊரை, ஒரு குடும்பத்தை, ஒரு காதலை, இன்னும் சில மனிதர்களின் வாழ்வைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்’ என்ற அறிவிப்போடுதான் நம்மைப் படத்திற்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குநர். இதன் மூலம் தேவையற்ற முன்கூட்டிய விமர்சனங்களின் வாயை அவர் ஆரம்பத்திலேயே அடைத்துவிடுகிறார்.
உண்மையில் இஸ்லாமியர்களின் வாழ்வியல் என்பது, அந்தந்த மண் சார்ந்த கலாசாரத்துடன் கலந்து புதுவிதமாகப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்வியல் அமைப்பாகும். இப்படத்தில் காட்டப்படும் கடையநல்லூர் பகுதியில் கைத்தறி தொழிலும், மேலூர் போன்ற பகுதிகளில் பாய் பின்னும் தொழிலும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையின் முக்கியப் பகுதியாகக் காட்டப்படுகின்றன. இஸ்லாமியர்களுக்குள் சாதியக் கோட்பாடுகள் இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியிலும் தொழில் ரீதியிலும் நிலவும் சில தீர்க்கமான வேறுபாடுகளை இப்படம் மேம்போக்காகத் தொட்டுச் செல்கிறது.
இரண்டே கால் மணிநேரத்திற்குள் ஒரு முழுமையான வாழ்வைப் பார்த்த திருப்தியைத் தருகிறது இத்திரைப்படம். திரைக்கதைக்கும் முழுமையான காட்சி அனுபவத்திற்கும் எது தேவையோ, அதை மட்டுமே மிகச் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். நடமாடும் கதாபாத்திரங்களில் கஸ்தூரி ராஜா தவிர்த்து, மற்றவர்கள் அனைவரும் புதிய முகங்களாக இருப்பது கதைக்கு இன்னும் நெருக்கமான ஒரு எதார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
இஸ்லாமியர்களின் ஒரு குறிப்பிட்ட பகுதி பற்றிய கதை என்றாலும், அதை எல்லா தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும்படி எளிமையாகக் கூறியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். ‘புதிதாய் ஏதோ சொல்லி வரலாற்றை எழுதுகிறேன்’ என்ற பந்தா இல்லாமல், மிக எளிய மொழியில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில், இந்தக் கதையில் இஸ்லாமியர்கள் எனும் அடையாளத்தை நீக்கிவிட்டு, வேறு சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வாழ்வியலாக மாற்றிக் கூறினாலும் பொருந்தும் அளவிற்கு இது ஒரு சிக்கலற்ற பொதுவான மொழியைக் கொண்டுள்ளது.
நாயகன் ஈஸாவின் நடிப்பு ஆரம்பத்தில் போதாமையோ என்று சந்தேகிக்க வைத்தாலும், போகப்போக அந்த கதாபாத்திரத்தின் தன்மையே அதுதான் என்ற இயல்பான புரிதல் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. சிறு வயதுக் கதாபாத்திரத்தில் வரும் கஸ்தூரி ராஜா மட்டும் நடிக்கக் கொஞ்சம் சிரமப்படுவது தெரிகிறது. ஆனால், எண்பதுகளில் வரும் ஒரு இஸ்லாமியப் பெண்ணின் கதாபாத்திரத்திற்கு மாளவிகா மிகச் சிறந்த தேர்வு. பாசமான சித்தப்பா, சின்னம்மா, ஊர் உறவுகள் என அத்தனை முகங்களுக்குள்ளும் இருக்கும் இயல்பான நம்பகத்தன்மையே இப்படைப்பின் ஆகச்சிறந்த வெற்றியாகும்.
இஸ்லாமியப் பார்வையில் காதல் என்பது வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பு மட்டுமல்ல; அது ஆன்மிகத்தோடும் தூய்மையோடும் தொடர்புடையது. திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகள் கண்ணியத்துடனும், எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஒரு தூய உணர்வாகவும் காட்டப்பட்டுள்ளன. இஸ்லாமியத் தத்துவங்களின்படி, உண்மையான அன்பு என்பது தியாகத்தையும் பரஸ்பர மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படம் அந்த எல்லையைத் தாண்டாமல் காதலின் ஆழத்தை அழகாகப் பதிவு செய்துள்ளது.
அதே சமயம், ஓர் இஸ்லாமியரின் பார்வையில் இத்திரைப்படத்தை அணுகும்போது, அதில் காட்டப்படும் சமூகச் சவால்களும், மரபுவழிச் சிந்தனைகளும் உற்றுநோக்கத்தக்கவை. நவீன உலகிற்கும் பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்கும் இடையே வாழும் இளைய தலைமுறையினரின் மனப்போராட்டத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. சமய நெறிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொள்ளும் சில சமூகக் கட்டமைப்புகளைப் படம் விமர்சன ரீதியாகவும் அணுகத் தவறவில்லை. இஸ்லாமியக் கலை வடிவம் மற்றும் சூஃபித்துவ இசையின் தாக்கம் இப்படத்தின் பின்னணியில் ஆங்காங்கே இழையோடுகிறது. மனதை அமைதிப்படுத்தும் இசையும், காட்சிகளின் அமைப்பும் இஸ்லாமியப் பண்பாட்டின் அழகியலைத் திரையில் கொண்டுவந்துள்ளன.
வெறும் சம்பவங்களின் தொகுப்பாக இல்லாமல், அதற்குள் ஒரு காதல், அதில் வரும் சிக்கல்கள் என சுவாரசியமாக நகர்கிறது திரைக்கதை. எண்பது மற்றும் தொண்ணூறுகளின் இஸ்லாமிய ஊர்க் கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்களை மிக மேலோட்டமாக அணுகியிருந்தாலும், அது இந்தக் கதைக்கு போதுமானதாகவே இருக்கிறது.
சில காட்சிகள் நம்மை நெகிழ வைக்கின்றன. குறிப்பாக அபுவின் சித்தி கேரக்டர். நகைகளைக் கொண்டு வந்து அபுவிடம் கொடுக்கும் காட்சியில், அவன் அதை மறுத்து, “உங்களுக்கு இது சந்தோஷம்” என்று சொல்ல, “என் சந்தோஷம் இதுதான்னு நினைச்சிட்டே இல்லை?” என்று அவள் சொல்லும் காட்சி. அந்தக் குடும்பத்தில் அவ்வப்போது சின்னதாக முரண்பட்டுக் கொண்டே இருந்தாலும், அபுவின் மீது அவள் கொண்டிருக்கும் பாசமும் குடும்பத்தின் மீதான பற்றும் அழகாக வெளிப்படுகின்றன.
கூட்டுக் குடும்பத்தின் அண்ணன் தம்பிக்கு இடையே இருக்கும் பிணைப்பு மிகவும் மென்மையாகவும் அழகாகவும் காட்டப்பட்டிருக்கிறது.
அதே போல் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் கணவனுக்கும் மனைவிக்குமான மெல்லிய ஊடல், கோபதாபம், அவற்றைத் தாண்டிய காதலும் அன்பும் வெகு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாஸ்போர்ட் எடுப்பதற்காக மைனர் பையனுக்கு வரையப்படும் மீசை
சுன்னத் விசேஷக் கொண்டாட்டங்கள்
ளிநாட்டுப் பெட்டி பிரிக்கும் பொழுது நிலவும் ஆர்வம்
இளமையைத் தொலைக்கும் இளைஞர்கள்
ஒரே சமூகத்திற்குள் இருக்கும் பொருளாதார பேதங்கள்
இவை யாவும் வெறும் காட்சிகளாக இல்லாமல், எதார்த்த உண்மைகளின் சாட்சிகளாகப் பதிவாகியுள்ளன. துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் நடித்திருக்கிறார்களா அல்லது அப்படியே வாழ்ந்திருக்கிறார்களா என்ற சந்தேகம் படம் முடிந்த பிறகும் நீடிக்கிறது. அந்த அளவிற்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.
இஸ்லாமிய உலகத்திற்குள் இன்னும் சொல்லப்படாத கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. அன்பு, வன்மம், குறுகிய அதிகாரம், தியாகம் என ஆயிரம் கதைகள் மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தனையோடும் உரையாடுவதற்கான ஓர் இனிய தொடக்கமாக இந்த ‘ஹபீபி’ அமைந்திருக்கிறது.
ஒரு கலைப்படைப்பு சமூகத்தின் ஒட்டுமொத்த வெளிச்சமாகவோ அல்லது அறிவுக்கூடாரமாகவோ மாறிவிடும் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால், சினிமாவை மட்டுமே வைத்து ஒரு சமூகத்தை எடைபோடும் மேலோட்டமான மனிதர்களின் மனதில், இப்படியொரு படைப்பு நிச்சயம் ஒரு புதிய பார்வையை, புதிய சாளரத்தைத் திறந்து வைக்கும். சினிமாவையே உலகமாக நினைத்துத் தங்களை ஒப்படைத்துக் கொள்ளும் ரசிகர்களுக்கு இதைவிட வேறு என்ன நன்மையைத் தந்துவிட முடியும்?
உண்மையில், இன்றைய வணிகச் சூழலில் இப்படியொரு எதார்த்தமான படைப்பைச் சினிமாவாக்கத் துணிவது ஒரு ‘தற்கொலை முயற்சிக்கு’ சமமானது. என்றாலும், அதைத் தரமான படைப்பாக, ஒரு வெகுஜன மொழியில் கையாண்டிருக்கும் தோழர் மீரா கதிரவன் வகுத்திருக்கும் இப்பாதை அற்புதமானது. இனி அடுத்தடுத்து வரப்போகும் படைப்புகள் பயணிப்பதற்கும், உயரிய ரசனை கொண்ட சினிமாக்களை உருவாக்குவதற்கும் இத்திரைப்படம் ஒரு முன்னோடியாக இருக்கும்.
படத்தில் ஆங்காங்கே சில குறைகள் இல்லாமலில்லை. என்றாலும், தியேட்டர்களில் நிலவும் ஆயிரம் வணிக இரைச்சல்களுக்கு மத்தியில், ஒரு நல்ல திரையனுபவத்தைத் தந்த ‘ஹபீபி’யின் முன்னால் அந்தக் குறைகளைப் பெரிதுபடுத்தத் தோன்றவில்லை.
மீரா கதிரவனின் முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படத்திலும் யதார்த்தமான வாழ்வியல் பதிவுகள், மிகைப்படுத்தப்படாத வசனங்கள் மற்றும் காட்சிக் கோணங்கள் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன. இஸ்லாமியக் கலாச்சாரத்தின் அழகியலையும், அதே நேரத்தில் அச்சமூகத்திற்குள் விவாதிக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களையும் அவர் சமச்சீராகக் கையாண்டுள்ளார்.
ஒரு முற்போக்கு இஸ்லாமியரின் பார்வையில், ‘ஹபீபி’ என்பது வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல; அது ஒரு சமூக உரையாடல். மதத்தின் பெயரால் மனிதநேயத்தை மறந்து வாழும் தற்காலச் சமூகத்திற்கு, ‘அன்பே பிரதானம்’ என்ற உன்னதச் செய்தியைத் தமிழ் சினிமாவின் தரம் குறையாமல் தந்துள்ளார் மீரா கதிரவன். காலமாற்றத்திற்கு ஏற்ப சிந்தனைகளைச் சீரமைக்க விரும்பும் அனைவரும் கொண்டாட வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு முக்கியப் படைப்பு ‘ஹபீபி’.










