நர்சிம்
இந்தக் கட்டுரையின் முதல் வரியாக இதை எழுதுவதால் ஒருவகையில் இதுவும் ஒரு பொறுப்புத்துறப்பு ஆகிறது. (இந்த வலைத்தொடரின் ஆரம்பங்களில் வரும் ஒவ்வொருமுறையின் பொறுப்புத்துறப்பிலும் அந்த ஒரு சொல் உங்கள் கண்களிலும் பட்டால் நீங்களும் இந்தக் கதையின் போக்கை யூகித்துவிடக்கூடும்). தமிழ் சினிமா வரலாற்றில் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ திரைப்படத்திற்கென்று ஓர் இடம் நிச்சயம் உண்டு. அப்படியான ஒரு நேர்த்தியோடு காதலின் வலியைச் சொன்ன படம் அது. ஆனால் இப்படி பள்ளி செல்லும் மாணவிகளைக் காதல் கதைகளில் அதுவும் பள்ளி சீருடைகளோடு அப்பட்டமாகக் காட்டுவது சரிதானா எனும் கேள்வி எழுந்து, விவாதப்பொருளும் ஆனது.
வதந்தி 2லும் அப்படியானக் காட்சிகள் உள்ளன. வசனங்களில் சமாளிக்கும் விதமாக, தேர்வில் தோற்றுத் தோற்று படிப்பதாகவும் பத்தொன்பது வயது ஆகிவிட்டது என்றும் சமாளித்துவிட்டாலும், இத்தகைய காட்சிகள் ஏற்புடையது அல்ல என்று சொல்லியே துவங்கலாம்.
மத்திய அரசின் ’எட்டுவழிச்சாலை’ பூஜைக்காகத் தோண்டும்பொழுது இரண்டு எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. மத்திய அரசிற்கு எதிராக மாநில அரசின் சதி எனப் பழி விழுந்துவிடும் என்பதால் இந்த எலும்புக்கூடு விசாரணையை துரிதமாகவும் தீவிரமாகவும் கண்டுபிடித்து முடிக்கும்படி காவல்துறைக்கு அழுத்தம் வர, யாருடைய எலும்புக்கூடுகள் அவை எனத் தேடத்துவங்கி, ஒவ்வொரு புள்ளியாகை இணைத்து விசாரணையை வெற்றிகரமாக முடிப்பது தான் கதை.
வலைத்தொடர்களுக்கும் சினிமாவிற்கும் இருக்கும் ஒரு முக்கிய வேறுபாடு, கால அவகாசம். ’ரன்னிங் டைம்’ என்பார்கள். அதிகபட்சம் 2:45 தான் சினிமாவிற்கு, ஆனால் வலைத்தொடர் எனும் இந்த வெப்-சீரிஸ்களுக்கு மராத்தான் போல ரன்னிங் டைம் ஓடிக்கொண்டே இருக்கலாம் எனும் வசதி பார்வையாளுருக்குச் சற்றே அசதியை ஏற்படுத்திவிடுகின்றன. இந்தத்தொடரிலும் அந்தச் சிக்கல் இருப்பதை சிலர் உணரலாம்.
ஆம், அந்த சிலரில் ஒருபிரிவினருக்கு, கிராமம், ஜல்லிக்கட்டு போன்றவை பிடிக்காமல் இருக்கலாம். வேறு சிலருக்கு DNA சோதனைகளை விரிவாகக் காட்சிப்படுத்தி அது தொடர்பான விவரணைகள் அசதியை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், இப்படியானக் காட்சிகளின் ஓரத்தில் தொடரின் முக்கிய அம்சமான ‘யார் கொலையாளி, ஏன் செய்யப்பட்டது’ எனும் வினாவைத் தேடும் புள்ளிகளை இட்டுக்கொண்டே போவதால், திருப்பங்களை எதிர்நோக்கி பார்வையாளர்களையும் மொத்த ஐந்து மணிநேரங்களையும் கட்டுக்குள் வைத்து, binge-watch செய்ய வைப்பதுதான் இயக்குநரின் திறமை. வதந்தியின் இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இதைத் திறம்பட கையாண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தத் தொடரை மிக எளிதாக ஐந்து மணி நேரங்கள் ஒரே அமர்வில் பார்க்கும்விதம், எட்டு எபிசோடுகளாக, ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் ஒரு ‘திருப்பம்’ வைத்து கச்சிதமான க்ரைம் த்ரில்லராக கொண்டு வந்திருக்கிறார்.
மறுபக்கம், தொடரின் பாத்திரங்கள் மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால் இந்தத் தொடரின் வெற்றி அல்லது சுவாரஸ்யம் என்பது பாத்திரத் தேர்வுகளும், அந்தப் பாத்திரங்களை வார்த்த விதமும்தான்.
பிரதானப் பாத்திரமாக எல்லோரும் சசிக்குமாரைச் சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் நடிகர் யஷ்வந்த் ஏற்று நடித்திருக்கும் ‘முடக்கத்தான் மணி’ என்கிற பாத்திரம்தான் முதன்மைத்தன்மை கொண்டது.(முடக்கத்தான் மணி என்று உண்மையிலேயே ஒரு மாடுபிடி வீரர் இருக்கிறார், எனில் மிக நன்றகாக் களப்பணி செய்திருக்கிறார்கள்) கதை அவரைச் சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது. மிக அற்புதமாக நடித்திருக்கிறார், யஷ்வந்த். குறிப்பாக வட்டார வழக்கு உச்சரிப்புகள், ஆரம்பத்தில் அலட்டலாக இருக்கும் உடல்மொழி, பழி ஏற்றபிறகு மாறுபடுவது என மிக நேர்த்தியாகத் தன் பாத்திர மெருகூட்டலைச் செய்திருக்கிறார்.
சசிக்குமார், மூசா ராசா எனும் பெயர்தாங்கி, நிதானமாகப் பேசக்கூடிய, மிக நேர்மையான அதிகாரியாக ஓரளவு பொருந்திப் போகிறார். தாடி, மார்கம், கர்பிணி மனைவி, அவரைப் பார்த்துகொள்ளும் அன்புக்கணவர் என அவருடைய பாத்திரத் தெளிவிற்கானக் காட்சிகளாக வைத்திருந்தாலும், அவை இல்லாமலே நாம் சசிக்குமாரை இப்படித்தான் பார்த்திருப்போம் எனும் வித பிம்பம் இருப்பதால் நம்மால் எளிதில் அவரோட பயணப்பட முடிகிறது.
சசிக்குமாரின் உயரதிகாரியாக வரும் அனகா பாத்திரம் மிக முக்கியமான ஒன்று. ஒரு பெண் உயரதிகாரி என்றாலே அவர் அதிகாரத்திமிரில் இருப்பவர், குழந்தையைக் கொஞ்சிக்கொண்டே மற்றவர்களைக் கடிந்து கொள்வது, கணவரை மதிக்காமல் இருப்பது போன்ற ‘டெம்ப்ளேட்களில்’ இருந்து முற்றாக மாறுபட்ட, மிக நல்ல பாத்திர அமைப்பு. அதை மிக நேர்த்தியாக மலையாளம் கலந்த தமிழில் பேசும் நபராக அசத்தி இருக்கிறார். கணவருக்குத் தன் மேல் இருக்கும் ஈகோவை அறிந்து, அதைக் கையாளும் உளவியல் என்பது ஒருபக்கம் எனில், கணவர் பாத்திரமும், வக்கீலாக, சிறப்பான வடிவமைப்பு. அதாவது, அனகாவின் வீடும் கணவரும் காட்டப்பட்ட விதம் இயல்பிற்கு வெகு அருகில் இருந்தது, சிறப்பு.
தன் மேலதிகாரியிடம், முடிந்து போன வழக்கில் நெருடல் இருக்கிறது மீண்டும் கையில் எடுத்து விசாரிக்கலாம் என்று சொன்னவுடன் கோபம் கொண்டு திட்டி மறுப்பார் அந்த அதிகாரி. பிறகு மாத்திரை எடுத்துக்கொண்டு நிதானத்திற்கு வந்து, அனுமதி அளிப்பார். போலவே இன்னொரு காட்சி உண்டு. சசிக்குமார் உடன் இருக்கும் ஆர்வக்கோளாறு கான்ஸ்டபிள் மிக முக்கியமான செய்தியைக் கசியவிட, பெரும் சிக்கலில் மாட்டுகிற அதிகாரிகளைக் கமிஷ்னர் அழைக்கிறார். மேலே குறிப்பிட்ட அனகாவின் உயரதிகாரி உட்பட மூவரும் கலக்கத்தோடு கமிஷ்னரை எதிர்கொள்ளும் காட்சியில் மிக மிக எளிதாக அந்தக் கமிஷ்னர், “இதெல்லாம் நடைமுறையில் தடுக்க முடியாதுதான், என்ன வேண்டும் எப்படி இதைத்தீர்ப்பது, பெரிய டீம் தருகிறேன்” என பேசும் காட்சி.
டிஎன்ஏ பரிசோதனை நிபுணராக, கைலியோடு தன் பணியிடத்தில் சுற்றும் சேத்தன் பாத்திரம் எளிமையும் மிடுக்குமான ஒன்று. நெஞ்சுவலிக்குப் பிறகு அந்த மூச்சிரைப்போடு பேசுவதில் சேத்தனின் நுட்பமான நடிப்பு வெளிப்படுகிறது.
இப்படி அன்றாடங்களின் இயல்பில் வார்கக்ப்பட்ட பாத்திர அமைப்புகள் என்று நான் சொல்ல முற்படுவது இதுபோன்ற மிகத் தெளிவான, இயல்பான மனிதர்களைக் கொண்ட காட்சிகளால் தான்.
விவேக் பிரசன்னாவின் நாகர்கோயில் வட்டாரமொழி உச்சரிப்பு மட்டும் துருத்திக்கொண்டு இருந்தாலும், அவருடைய உடல்மொழியால் சமாளிக்கிறார். உடன் இருக்கும் மற்ற காவலர்களின் நடிப்பும் இயல்பாகவே இருந்தன.
தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுபவர்கள் அடிக்கடி சொல்வது, “தமிழ் சினிமாவில் ஐடி யை காட்டுவதாகக் கூறிக்கொண்டு கேலிக்கூத்தாக்குகிறார்கள், ஐட் என்றாலே தடதடவென லேப்டாப்பைத் தட்டுவது, ஆண் பெண் உல்லாசம், பப் குடி கூத்து என்பதாகவேக் காட்டுகிறார்கள் எனும் அங்கலாய்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது அல்லவா, அதற்கு சற்றும் குறைந்ததில்லை, மதுரையின் கிராமங்களை, ஜல்லிக்கட்டை, ( பொம்மைக் கொம்பைப் பிடித்து ஆட்டி அடக்கியவர்கள், பாடியே மாட்டைப் படுக்க வைப்பது) மதுரை வட்டார வழக்கை ( மதுரை சம்பவம் என்று ஒரு படம், மன்னிக்கவே முடியாத அளவு இருக்கும் அதில் கையாளப்பட்ட மொழி) எல்லாம் கேலிக்கூத்தாக்கிவிட்டு ஏதோ அச்சு அசலான கிராமியப் படம் எடுத்துவிட்ட தொனியில் பேசுவார்கள். அப்படி எல்லாம் இல்லாமல் இயல்பான ஒன்றைத் திரையில் காட்டியவர் சசிக்குமார், படம் அவருடைய சுப்ரமணியபுரம்.
இந்த வலைத்தொடரின் வட்டார வழக்கும் உடல்மொழியும் அந்த சுப்ரமணியபுரத்திற்கு சவால் விடும் வகையில் அவ்வளவு இயல்பாகவும் மண்ணோடு ஒட்டியும் இருந்தது,.
மாடுபிடிவீரனின் வாழ்க்கையை, மாட்டை அவன் பாசத்தோடு வளர்ப்பதை, மாட்டின் சுழிகள் பற்றிய விவரணைகளை, அவனோடு சுற்றும் நண்பர்களை மிகத் துல்லியமாக, இயல்பிற்கு வெகு அருகில் காட்சிப்படுத்தி இருப்பதால் இந்தத் தொடர் எனக்கு மிகவும் பிடித்தது. மிகத் துல்லியமான வசனங்கள்.
“உம் பையனுக்கு ஊருக்குள்ள யாரும்மா ஃப்ரெண்ட்ஸ்”?
எனக் காவலர் கேட்க, அம்மா
“அவனுக்கு ஊர் முழுக்க ஃப்ரெண்ட்ஸ்சுக தான்”
எனச் சொல்லும் பதில் ஓர் உதாரணம்.
இரட்டைக்கொலையில் ஆரம்பிக்கும் கதை, அது ஆணவக் கொலையா எனும் ரீதியில் விசாரிக்கத் துவங்கும்போது வியப்பான கதைக்களம் என்றாகிறது. ஆனால் அதன்பிறகு வரும் ‘சீரியல் கில்லர்’ கோணத்தில் நகர்த்தப்படும் காட்சிகள், ஒரு வடக்கத்தி ஆள், ஆட்டோவில் பெண்களை முறைத்துக்கொண்டு போவது போன்ற திசைதிருப்பல்கள் அனைத்தும் தேவையற்று, ஒட்டாமல் இருந்தன. அந்த டிஎன்ஏ ஒப்பீடுகள் சார்ந்து நீளும் காட்சிகள் பிறகு ஏன் ஒரே போன்று மற்ற கொலைகளிலும் ஒத்துப்போனது என்பதற்கு சொல்லப்பட்ட காரணம், சிறுபிள்ளைத்தனம்.
இந்த வலைத்தொடரில் வந்த பெண் பாத்திரங்கள் அனைத்துமே சிறப்பானவை.
போலிஸ் உயர் அதிகாரியாக வரும் அனகா, நேர்மையும் சக அதிகாரிகளிடம் மரியாதையும் கொண்டப் பாத்திரம்.
முடக்கத்தானின் அம்மா பாத்திரம். தன் மகன் கொலை செய்திருக்க மாட்டான் என அவுட் ஆஃப் போகஸ் காட்சிகளில் கூட புலம்பும் குரலோடு சுற்றும் வெகுளி. “ஏண்டா வராதனு சொல்ற” என சிறையில் அவர் கேட்கும் காட்சியில் அவரின் இயலாமையும் வெகுளித்தன்மையும் நன்கு வெளிப்படும்.
தன் மகனுக்காக எந்த எல்லைக்கும் போகும் நண்பனின் தாயார் பாத்திரம், தன் காதலைத் தெளிவாக வெளிப்படுத்தும் நாயகி, நண்பனின் காதலியாக வருபவர், ‘நான் உன் ஃப்ரெண்டு கூடா பேசாதனு நான் சொல்லவே இல்லையே’ எனும் பாத்திரம், ‘அவளோட ட்ரெஸ்ல ஒன்ன எடுத்துக்கவா’ என வெதும்பும் தோழி என எல்லாப் பாத்திரங்களும் நன்றாகவே எழுதப்பட்டிருக்கின்றன.
ஆனால், கதையின் மைய்ய முடிச்சான, நாயகனின் தங்கைப் பாத்திரம் இன்னும் நன்றாகவும், இப்போது இப்படி இருப்பதன் உரிமையை எடுத்துக்கூறும் தைரியமானப் பெண்ணாகவும் காட்டி இருக்கலாம். அது ஏதோ மாபெரும் அசிங்கம் என்பதாக நாயகன் வாயைத் திறக்காமல் கொலைப்பழி ஏற்பதும், அந்த ‘விசயத்தை’ சொல்லிவிடாதே என நண்பனிடம் கதறி அழுவதும் பின்னர் அதையே கோரிக்கையாக வைப்பதாகக் காட்டியதில், அவர்களுக்காக, இந்த விசயத்திற்காகப் பேசப்படும் நியாயம் அற்றுப் போய்விடுகிறது என்பதே உண்மை.
மற்றபடி, தென்மாவட்ட கிராமத்தின் அசலான வாசனையோடும் க்ரைம்கதைக்கான அத்தனை அம்சங்களோடும் வெளிவந்திருக்கும் நல்ல பொழுதுபோக்குதான் இந்த ‘வதந்தி 2’.வலைத்தொடர்.











