
வடகிழக்கு இந்திய சினிமா – ஓர் அறிமுகம்
தென்மேற்குப் பருவ மழைக்காலம் முடிந்து மரஞ்செடி கொடிகள் பூத்துக் குலுங்கும் இரண்டாம் வசந்த காலமான அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஷில்லாங் நகரம் களைகட்டத் தொடங்கிவிடும். உலகெங்கிலுமிருந்து கலை இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடும் செர்ரி ப்ளாசம் விழாவிற்கான ஏற்பாடுகளில் மொத்த நகரமுமே கொண்டாட்ட அரிதாரம் பூசியிருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவ்விழாவில் பங்கேற்கும் ஆவலுடன் என் நண்பரை அழைத்துக் கொண்டு ஷில்லாங் சென்றிருந்தேன். பனிக்காலத்தை வரவேற்கும் குதூகலத்துடன் செர்ரி மரங்கள், வெண்சிவப்பு நிற மலர்களைச் சூடிக்கொண்டு காட்சியளித்தன. அங்கு ஒரு ஹோம்ஸ்டேவில் நாங்கள் தங்கினோம். கிரேஸ் ஹோம்ஸ்டே. ஒரு வீட்டையே தங்கும் விடுதியாக மாற்றியிருந்தார்கள். ஒரு பெண்மணியும் அவருடைய மகளும் அவ்விடுதியை நிர்வகித்து வந்தனர்.
கிரேஸ் ஹோம்ஸ்டேவின் சுவர்களைப் பல்வேறு வடக்கிழக்கிந்திய கலைஞர்களின் புகைப்படங்களும் ஓவியங்களும் அலங்கரித்தன. அவர்களில் தாகூரையும் பூபென் ஹஜாரிகாவையும் தவிர வேறு யாரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. திருமதி கிரேஸின் மகள் எங்களுக்குத் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள். அவளிடம் அப்புகைப்படங்களில் இருப்பவர்கள் யாரென்று கேட்டேன். அவள் அவர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் எந்தக் கலையில் சிறப்புற்று விளங்கினர் என்பதையும் கூறினாள். அவளுடைய அறிவும் ரசனையும் என்னைத் திகைப்பில் ஆழ்த்தின.
அன்று மாலை நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த பெரிய விளையாட்டுத்திடலில் அரங்கம் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான இசை நிகழ்ச்சிகள் நடந்தன. உலகின் பல பகுதிகளிலிருந்து இசைக் கலைஞர்கள் வந்திருந்தனர். அன்று நடுநிசியைக் கடந்துதான் நிகழ்ச்சிகள் முடிந்தன. குளிரில் நடுங்கிக்கொண்டே வந்த எங்களுக்கு ஹீட்டர் போட்டு வெப்பமாக்கியிருந்த அறை சொர்க்கலோகமாகத் தெரிந்தது. திருமதி கிரேஸைத் தொலைபேசியில் அழைத்து நன்றி கூறினேன். அவருடைய குரலிலும் அதே கதகதப்பு. மறுநாள் காலை தேநீருக்குத் தனது வீட்டிற்கு வருமாறு எங்களை அழைத்தார்.
இலக்கியக் கருத்தரங்கம் மறுநாள் மாலை நடக்கவிருந்ததால், பகல் நேரத்தை அறையிலேயே கழிக்கலாம் என்று நானும் நண்பரும் முடிவெடுத்தோம். என்னுடன் வந்த நண்பர் மனைவியைப் பிரிந்த தவிப்பில் இருந்தார் போலும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தன் மனைவியைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். வீடியோ காலில் அழைத்து ஷில்லாங்கின் அழகைச் சிலாகித்துக் கொண்டிருந்தார். அவரை அறையிலேயே விட்டுவிட்டு நான் திருமதி கிரேஸைச் சந்திக்கச் சென்றேன்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.