அய்யப்ப மாதவன்
என் பால்யத்திலிருந்தே என்னை அறிந்தவன். என் வாழ்வின் அனைத்து பக்கங்களையும் தெரிந்தவன். அவனிடம் மட்டுமே எல்லாம் சொல்வேன். இனி யாரிடம் சொல்வேனென்று தெரியவில்லை. அவனைப் போன்ற ஆத்மார்த்தமான நண்பன் என் உலகில் யாருமில்லை.
அவருடைய அப்பா ஓவிய ஆசிரியர். அவரிடம் படித்தேன். அவனும் ஐந்தாம் வகுப்புவரை என்னுடன் படித்தானென ஞாபகம். அதன் பிறகு அவனை அருப்புக்கோட்டையில் ஆசிரமப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்தான். நடுநடுவே விடுமுறைக்கு வரும்போது அவனைப் பார்ப்பேன். பேசுவேன். செஸ், டென்னிக்காய்ட், எறி பந்து எல்லாம் விளையாடியிருக்கிறேன்.
ஒரு முறை ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எறிபந்து விளையாட்டில் என்னை முதுகில் பலமாக பந்தால் தாக்கிவிட்டான். சிவந்த முதுகுடன் அவன் அம்மாவிடம் போய் முறையிட்டேன். அவன் அம்மாவும் அவனைக் கூப்பிட்டு கண்டித்துவிட்டு, “ஏன்டா அப்படி எறிஞ்ச? மன்னிப்பு கேளு,” என்று சொல்லியதும் அவனும், “சாரிடா” என்றதும், அவனது அம்மா “கை குலுக்கிங்க” என்று சொல்லவும் இருவரும் கைகுலுக்கிக்கொண்டபோது அன்பாய் சிரித்தான். எப்போதும் அவனது கோபமெல்லாம் கொஞ்ச நேரம்தான். பலமுறை என்னிடம் கோபப்பட்டிருக்கிறான். அப்புறம் அவனாகவே வந்து பேசுவான்.
என்னைப் பற்றி என்னிடம் பேசுவதைவிட, நண்பர்களிடம் அதிகம் பேசிக் கொண்டிருப்பான் என்று நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். என்னிடம் அதிகம் நேசமிருப்பதை இவ்வாறு பேசிக்கொண்டிருந்தைக் கேட்டு எனக்குள் மகிழ்ந்துபோயிருக்கிறேன்.
பத்தாம் வகுப்பு தேர்வில் என்னைவிடவும் அதிகம் மதிப்பெண் எடுத்து காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிகில் சேர்ந்தான். நானும் காரைக்குடி அருகிலுள்ள செட்டிநாட்டில் பாலிடெக்னிகில் சேர்ந்தேன். அப்போது செட்டிநாட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு காரைக்குடிக்கு படம் பார்க்க வருவேன். அப்போது செழியனின் ஹாஸ்டலில் அவனுடன் தங்கி அவனுடன் சாப்பிடுவேன். அங்கு அவன் பாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசெல்லாம் பெற்றதைச் சொல்வான். நானும் அவனும் நாட்டரசன் கோட்டையில் லீவு நாட்களில் சந்திக்கும்போது காதல் ஓவியம் படப் பாடல்கள், டி ராஜேந்தர் படப் பாடல்களைப் பாடிக்கொண்டு திரிவோம். செழியன் என்னைவிடவும் சுதி சுத்தமாய்ப் பாடுவான்.
ஓவியங்கள் வரைவதிலும் கெட்டிக்காரன். அவனுடைய எழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். ஒருமுறை சிலேட்டில் நான் சிவாஜி என்றும் அவன் எம் ஜி ஆர் என்றும் எழுதிப் பார்த்துக்கொண்டோம். அவனிடமிருந்துதான் எனக்கும் கலையின் மீது ஆர்வம் பிறந்தது. நானும் பாடுவேன். ஓவியம் வரைவேன். நன்றாக எழுதுவேன். இவையெல்லாவற்றையும் அவன் நினைவுகளாய் என்னிடம் விட்டுச்சென்றிருக்கிறான்.
பாலிடெக்னிக் படித்து முடித்து இருவரும் வேலையில்லாமல் திரிந்தோம். அப்போது எங்களூரில் வைகாசித் திருவிழா வருடம் ஒரு முறை வரும். அதில் நாடகம் போடலாம் என்ற எண்ணம் எங்களுக்குள் தலை தூக்கியது.
செழியனுக்கு அப்போதே திரைக்கதை எழுதவும், இயக்கவும் ஆசையிருந்தது. முதல் நாடகத்தின் பெயர் `அடுத்தது யார்?’. அது ஒரு துப்பறியும் நாடகம். நண்பன் பேரரசுவும் ( பின்னாளில் திரைப்பட இயக்குனர்) செழியனும் சேர்ந்து கதை எழுதி இயக்கினார்கள். அந்த நாடகத்தில் ஒரு காட்சியில் ஒரு பையனை கயிறு கட்டி தூக்கிலே தொங்கவிட்டோம். ஊரே அதிசயமாய்ப் பார்த்தது. பிறகென்ன? வருடா வருடம் நாடகம். குறைந்தது பத்து நாடகம் போட்டிருப்போம். கடைசியாய்ப் போட்டது `நினைவுகள்’ எனும் நாடகம். அதில் லைட்டிங் எல்லாம் சிறப்பாக அமைத்திருந்தோம். பார்ப்பதற்கு சினிமா போன்றே காட்சிகள் அமைந்த நாடகம். ஊர் மக்கள் பாராட்டினார்கள்.
கலைத்தென்றல் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் மூலம் ஊரில் நிதி வசூலித்து நாடகங்கள் போட்டோம். இசை, மேக்கப், லைட்டிங் என தெரிந்தவற்றையெல்லாம் செய்து பார்த்தோம். நடிக்க ஒரு பெண்ணை மதுரையிலிருந்து அழைத்து வந்திருந்தோம்.
நினைவுகள் நாடகத்துடன் செழியன் சிவகங்கையில் அரசாங்க உத்தியோகத்தில் பி டபிள்யூ டி அலுவலகத்தில் தற்காலிக பணியில் வேலைக்கு போய்விட்டான். நானும் பஞ்சு நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணி புரிந்தேன்.
முதல் நாடகம் முடிந்ததும் பேரரசுவை சென்னைக்கு அனுப்பி வைத்தோம். அவனும் இயக்குநர் இராம.நாராயணனிடம் உதவியாளராகச் சேர்ந்திருந்தான். அடுத்து எனக்கு திருமணம் நடந்து நானும் சென்னையில் இருந்தேன். ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரிந்துகொண்டிருந்தேன். செழியன் சென்னை வந்திருந்தான். அவன் நண்பனின் உதவியுடன் சீமானின் வீட்டில் தங்கிக்கொண்டான். வீரநடை படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்தான். அப்போது அந்தப் படத்தில் பாடல் எழுதும் ஆசையில் செழியனிடம் சொல்லியிருந்தேன். ஆனால் எதும் பெரிதாக நடக்கவில்லை. சீமானின் வீரநடையும் சோக நடையாகவே ஆகிவிட, அவனும் நானும் சேர்ந்து போர்ட் போலியோ என்ற பெயரில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை வடக்கு உஸ்மான் சாலையில் ஆரம்பித்தோம். பாஸ்போர்ட், மாடலிங் எல்லாம் செய்தோம். செழியன் எடுத்துக் கொடுப்பான். சிவகங்கையிலும் சலனம் என்ற பெயரில் ஸ்டுடியோ வைத்திருந்தான். அந்த ஸ்டுடியோவைப் பார்க்க ஆள் இல்லாமல் போனதால் என்னை இந்த ஸ்டுடியோவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சிவகங்கைக்கு சென்றுவிட்டான்.
நான் மட்டுமே ஸ்டுடியோவைப் பார்த்து வந்தபோது எங்கள் இடத்தைப் பக்கத்திலிருந்தவன் சேர்த்து வாங்கிவிடவே அதைக் காலி செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது. அத்தோடு அந்த ஸ்டுடியோ இழுத்து மூடப்பட்டது. இந்த ஸ்டுடியோவில் என்ன விஷேசமெனில் இலக்கியக் கூட்டங்கள் எல்லாம் நடத்தியிருக்கிறோம். இயக்குநர் அஜயன்பாலாவின் நூல் குறித்த விமர்சனக் கூட்டம் நடந்தது.
அங்கேயே நான் அஜயனை எடுத்த புகைப்படம் தங்கர்பச்சான் கண்களில் பட அஜயன் பாலா நடிகரான அதிசயமும் நடந்தது.
இயக்குநராகும் கனவு கடினமென ஊர் திரும்பிய செழியன், ஒரு சரியான முயற்சி செய்தான். அது என்னவெனில் அவனெடுத்த அழகிய ஒளிப்படங்களை பி.சி. ஸ்ரீராமுக்கு அவனுடைய கவித்துமான கடிதத்துடன் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தான். ஒளிப்பதிவு உதவியாளராக சேரும் வாய்ப்பை பி.சி வழங்க அவன் அவருடன் முகவரி படத்திலும் அலைபாயுதே படத்திலும் பணி புரிந்து வெளியே வந்தவன் விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவுகள் செய்தான்.
நண்பன் கதிர், எழுத்தாளர் சி. மோகன், மூலம் பாலாஜி சக்திவேலின் கல்லூரி படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானான். முதல் படமே அவனுக்கு சிறப்பானதாக அமைந்தது. அவனது ஒளிப்பதிவு நுணுக்கங்களை அனைவரும் பாராட்டினார்கள்.
அடுத்தடுத்து படங்கள். பாலாவுடன் இரண்டு படங்கள், விளம்பரப் படங்கள் என வெற்றிகளின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தான். மொத்தம் 12 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தான். அவனுக்கு படம் இயக்கவே ரொம்பப் பிடித்திருந்தது. அப்போதுதான் தன் சொந்தத் தயாரிப்பில் `டூ லெட்’ எனும் திரைப்படத்தை எடுத்து உலகம் முழுவதிலும் விருதுகளைக் குவித்தான். மொத்தம் 112 விருதுகள் பெற்றதாகச் சொன்னார்கள். அதுதவிர திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றான். `டூ லெட்’ படம் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கிறது.
நண்பன் சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஒளிப்பதிவாளராக பணி புரியும் போது நடிகர் விஜய் சேதுபதியை செழியன் தான் தேர்வு செய்தான் என்று சொன்னார்கள். நானும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கு என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அவனுக்கு மெயின் ஸ்ட்ரீம் படங்கள் எடுப்பதில் நாட்டமில்லாமலிருந்தது. குறைந்த முதலீட்டில் எதார்த்தமான படங்களையே எடுக்க விரும்பினான். அவனது இரண்டாவது தயாரிப்பான காகித மலர்கள் இரண்டே கதாபாத்திரங்களுடன் எடுக்கப்பட்ட படம். விருதுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாக அவனது உதவியாளர்கள் கூறினார்கள். அந்தப் படம் தியேட்டரில் வெளி வருவதற்குள் இவ்வுலகைவிட்டு போய்விட்டான். மனம் இன்னும் பதறுவதை நிறுத்தவில்லை.
அவனது இலக்கியப்பயணம் மிக முக்கியமானது. அவனுடைய உரைநடை அவ்வளவு அற்புதமானது. அவன் எழுதிய கதைகள் மொத்தம் 15 இருக்கலாம். சினிமா குறித்த கட்டுரைகள் நிறைய நூல்களாய் வந்திருக்கின்றன. ஆனந்தவிகடனில் தொடராய் வந்த `உலக சினிமா’ இன்றளவும் மக்கள் வாசித்துக்கொண்டிருக்கிற புத்தகம். அது தனி ஒரு நூலாய் சீர் வெளியீடாக வந்திருக்கிறது.
கதைகள் எழுதுடா என்று எவ்வளவோ சொல்வேன். ஆனால் திரைக்கதை எழுத மட்டுமே பிடித்திருக்கிறதென்று சொல்வான். எத்தனை திரைக்கதை எழுதி வைத்துவிட்டு போனானென்று தெரியவில்லை. அவனது எல்லாக் கனவுகளையும் கைவிட்டுவிட்டு நம்மைவிட்டு ஓடி மறைந்துவிட்டான்.
இசை பற்றிய அவனது நூல் மிகுந்த கவனம் பெற்றது. இசைப்பள்ளி ஒன்று நடத்தினான். பியானோ கிளாஸ் எடுத்தான். அங்கு போய் அவனைச் சந்தித்து பேசியதுண்டு..அவனது பையனும் நன்றாக பியானோ வாசிப்பான். அந்தச் சிறுவனும் உடல் நலம் குன்றியிருந்து இவ்வுலகைவிட்டு போய்விட்டான். மகனின் பிரிவு அவனை வாட்டி வதைத்திருக்கும். அதை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக்கொண்டதில்லை.
அந்தச் சோகத்திலிருந்து மீண்டு அதன் பிறகு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தான். அவனுடைய படங்களை இயக்கினான். உடல் நலம் 2020 வாக்கில் அவனுக்கு பாதிக்கப்பட்டிருந்து அதிலிருந்து மீண்டு எழுந்து நிறைய திரைப்பட பணிகள் செய்தான். உண்மையில் காலம் ஒரு கலைஞனை பயங்கரமாய்ச் சோதித்துவிட்டது.
எப்போதும் ஓய்வு நேரங்களில் திரைக்கதை எழுதுவான். நல்ல திரைப்படங்கள் பார்ப்பான். அவை பற்றி என்னிடம் சொல்வான். நானும் அவன் சொல்கிற படங்களைக் கண்டுபிடித்து பார்ப்பேன். நானும் அவனும் பகிர்ந்து கொண்டவை பெரும்பாலும் சினிமா பற்றியதாக இருக்கும். அப்புறம் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவன். அவன் ஜோக் அடித்தால் சிரித்தே வயிறு புண்ணாகிப் போகும். பல்லாவரத்திலிருந்து கிளம்பும்போது பேசத் தொடங்கினால் வளரசவாக்கம் அலுவலகம் வரும்வரை இருவரும் பல்வேறு விசயங்களைப் பேசி முடித்திருப்போம்.
ஆனால் கடைசி ஒரு மாதம் அவனிடமிருந்து அழைப்புகள் வரவே இல்லை. நானும் வாட்சப்பில் செய்தி அனுப்பினேன். கைபேசி சரியில்லை என்று பதில் அளித்தான். அதிகம் ஆசைப்பட மாட்டான். எளிமையானவன். ஆடம்பரங்களைத் தவிர்த்துவிடுவான்.
அவன் மறைவதற்கு பத்து நாட்களுக்கு முன்புதான் அவனிடம் பேசினேன். அதுவே கடைசிப் பேச்சாயிருக்கும் என்றும் நினைத்திருக்கவில்லை. ஆனால் அந்தப் பேச்சில் ஒரு அமைதி இருந்தது. அந்த அமைதியின் அர்த்தம் அப்போது எனக்கு புரிந்திருக்கவில்லை. அவன் மறைந்த பின்புதான் அந்த அமைதிக்கு அர்த்தம் புரிந்திருந்தது. அவன் எதையும் முன்கூட்டியே உணரக் கூடியவன். அவனுக்கு மரணம் வரப்போவதையும் உணர்ந்திருக்கிறான் என்றே நினைத்துக்கொண்டேன்.
அவனுடன் அதிகம் இருந்த நாட்கள் அஜயன்பாலாவின் மைலாஞ்சி படத்தின் படப்பிடிப்பின் போதுதான். ஒரு மாத காலத்திற்கு தூங்கும் நேரம் தவிர அவன் ஒளிப்பதிவினை ரசித்துக்கொண்டு, கூடவே அவனது நகைச்சுவைகளையும் ரசித்துக்கொண்டிருந்தேன்.
மகிழ்ச்சி திரைப்படத்தில் அவனுக்கு உதவியாளராகச் சென்றிருந்தேன். அப்போதும் அவனுடன் அதிக நாட்கள் இருந்தேன். அங்கு சிறுவர் பள்ளிக்கூடத்தில் சூட்டிங் எடுத்த போது என்னை நடிகர் விஜய் என்று சொல்லி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தான். மாணவர்கள் யாவரும் என்னிடம் கையெழுத்து நோட்டு புத்தகங்களுடன் வந்து குமிந்துவிட்டார்கள். என் நம்பரைக் கொடுத்துவிட்டான். எனக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு. சூட்டிங்க் முடிந்த பிறகும் நீங்க நடிகர் விஜயா? என்று போன் வந்துகொண்டே இருந்தது. இது போன்ற குசும்புகளை எப்போதும் செய்துகொண்டு தான் இருக்குமிடத்தை கலகலப்பாக வைத்திருப்பான்.
அவன் அவனுக்காக காத்திருந்த எதிர்கால இயக்குநர்களைப் பிரிந்ததுதான் மிகப் பெரிய சோகம். அவன் நடத்திய பிலிம் ஸ்கூல் அவனில்லாது தனிமையில் அழுதுகொண்டிருக்கிறது.
.உள்ளுணர்வுகளால் அறிவுறுத்தும் ஞானியைப் போன்றவன் செழியன்.
நானும் அவனின்றி இருக்கும் உலகத்தில் அவன் நினைவுகளின் மீது வாழ்ந்துகொண்டும் உறங்கிக்கொண்டிருக்கிறேன்.











