ஜா.தீபா
எழுத்தாளர் பூமணி சமீபத்தில் மறைந்தார். எழுத்தாளராக அறியப்பட்ட அளவுக்கு அவர் இயக்குநராக அறியப்படவில்லை. அவர் இயக்கிய ‘கருவேலம்பூக்கள்’ என்கிற ஒரு படம் தான் என்றாலும், தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் வைக்கத்தக்க ஒன்று. இவருடைய ‘வெக்கை’ நாவல் வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளிவந்தது. இலக்கியப்படைப்புத் திரைப்படமாக மாற்றமடைந்த வரிசையிலும் பூமணியின் எழுத்துகள் தகுதியான இடத்தைப் பெற்றிருக்கிறது.
கருவேலம்பூக்கள் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதற்கு இசை இளையராஜா, ஒளிப்பதிவு தங்கர்பச்சான். ராதிகா, நாசர், சோனியா , தலைவாசல் விஜய், சார்லி, பாலா சிங் நடித்திருக்கிறார்கள்.
கோவில்பட்டியும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் இன்றளவும் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளின் மையமாக இருக்கிறது. நாற்பது வருடங்களுக்கு மேலான தீப்பெட்டி தொழிற்சாலைகள் அங்கு உண்டு. இப்போது தொழிற்சாலையாக மாறியிருக்கும் அவை கம்பெனி என்று அழைக்கப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட கதை கருவேலம்பூக்கள். பூமணியின் கதைகள் கரிசல் மண், சந்தித்த மனிதர்கள், நிலங்கள், பழக்க வழக்கங்கள் , கிராமங்களின் மாற்றங்கள், சாதி அடுக்குகள், ஊர்ச் சாமிகள், பெண்களின் பாடுகள் என விரியக்கூடியவை. அவர் எழுத்தில் வராத மண்ணின் மக்கள் இல்லை என்று சொல்லுமளவு மனிதர்களைக் குறித்து நுணுக்கமாக எழுதிருக்கிறார். கிராமங்களின் முகம் மாறுந்தோறும் மனிதர்களின் எண்ணவோட்டங்கள் எப்படி மாற்றமடைகின்றன என்பதை எழுத்தில் கொண்டு வந்த முன்னோடி எழுத்தாளர் இவர். இந்த அத்தனை அம்சங்களையும் கருவேலம்பூக்கள் படத்தில் நம்மால் பார்க்க முடியும்.
கரிசல் குளம் என்கிற ஒரு ஊரின் பின்னணியில் சொல்லப்பட்ட கதை. அங்கு கூலி வேலை செய்து வருகிற வடிவுக்கு மூன்று குழந்தைகள். இரண்டு மகள்கள், அடுத்தது மகன். மூத்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதும், இரண்டாவது மகளைப் பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டும் என்கிற ஆசை வடிவுக்கு. அந்த நேரம் ஊரின் முக்கியஸ்தர் தனது மகன் தொடங்கவிருக்கும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு பெண்கள் வேலைக்கு வரவேண்டும் என்று சொல்ல, திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்கள், படிக்க அனுமதி மறுக்கப்பட்ட சிறுமிகள் எல்லோரும் வீட்டில் இருந்தபடி தீப்பெட்டி அடுக்குகிறார்கள். பக்கத்து ஊரில் வேறு ஒருவர் தீப்பெட்டி கம்பெனி தொடங்க, உள்ளூர் கம்பெனியை விட அங்கு கூலி அதிகம் என்றும் தினமும் கம்பெனி பஸ் வந்து அழைத்துப் போகும் என்றும் சொல்லப்பட, பள்ளிக்கூடம் போகிற சிறுமிகளின் படிப்பு நிறுத்தப்பட்டு கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
வடிவின் கணவன் நல்லமுத்துவுக்கு இனி தான் காட்டு வேலைக்குப் போக வேண்டாம் என்று தோன்றிவிட தினமும் சாராயம் குடிப்பதற்கு மகள்களின் கூலி உதவுகிறது. கல்யாண வயதில் இருக்கும் தனது மகளுக்கு திருமணம் செய்யாமல், இளைய மகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் குற்ற உணர்வு கொண்டிருக்கிறாள் வடிவு. இதன் பின் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் என்னவாகிறது என்பது தான் கதை.
இந்தப் படத்தினை வாழ்வியல் ஆவணமாகக் கருதலாம். வெளிப்படையாக சாதி அடுக்குகள் குறித்து இந்தப் படத்தில் சொல்லவில்லை என்றாலும், சமூக ஏற்றத்தாழ்வு சொல்லப்பட்டிருகிறது. வயலில் வேலை செய்து வீட்டிலும் தன் உழைப்பைக் கொடுக்கும் பெண்கள் பற்றிப் பேசுகிறது. இப்படியானப் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் கணவர்கள் குறித்து படம் சொல்கிறது.
குழந்தைத் தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் இது. பதினான்கு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் படிப்பு கூலிக்காக நிறுத்தப்பட்டு, தீப்பெட்டி தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு திருமணமானாலும் கூட மீண்டும் அங்கேய வேலை செய்கிற காலகட்டம் இருந்தது. இந்தப் படத்தில் பொங்கல் விடுமுறையில் வீட்டில் இருக்கும் ஒரு பெண் கூறுவாள். ‘சூரிய வெளிச்சத்தைப் பார்த்து எம்புட்டு நாளாவுது!’ என்று. காலை நான்கு மணிக்கு ஊருக்குள் வந்து நிசப்தத்தைக் கலைத்து ஓலமிடும் ஹாரன் சத்தத்தைக் கேட்டதும் தன்னிச்சையாக எழுந்து தூங்கிக்கொண்டே நடந்து பஸ்ஸில் பெண்களும், குழந்தைகளும் ஏறிச்செல்லும் காட்சித் திரும்பத் திரும்பக் காட்டப்படுகிறது. ‘அலுங்காம குலுங்காம நம்ம வீட்டுப் பொம்பளைப் புள்ளைங்க பக்கத்தூருக்கு மகாராணி மாதிரி போயிட்டு வாரதுக்கு அவங்களுக்கு என்ன கசக்குதா’ என்று சொல்லித் தான் அவர்களை அனுப்புகிறார்கள். வீட்டு ஆண்கள் சுகமாக உறங்கிக்கிடக்க, பெண்கள் வேலைக்கு செல்லும் காட்சிப்பதிவு இருக்கிறது.
பெண் குழந்தைகளின் படிப்பை நிறுத்தி அவர்களை கம்பெனிக்கு அனுப்பி வைக்கும் ஏஜென்ட்டுகள் காட்டப்படுகிறார்கள். கூலியில் இருந்து அட்வான்ஸும் ஒரு எவர்சில்வர் தூக்கு வாளி அல்லது குடத்தினை கொடுத்து சிறுமிகளை அழைத்துச் செல்லும் நடைமுறையைக் காட்டுவதெல்லாம் சொல்லப்பட வேண்டியது. ஏனெனில் இன்றளவும் திருமணமாகாத பெண்களை வேலைக்கு அழைத்து வருகையில் திருமணத்துக்குத் தங்கம், பாத்திரங்கள் தருவதாகச் சொல்லப்பட்டே அழைத்து வருகிறார்கள்.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் என்பது கரிசல் மண்ணின் ஒரு தொழிலாக மாறியபிறகு ஏற்பட்ட மாற்றங்களை இந்தப் படம் கதையின் போக்கிநூடே சொல்லிச் செல்கிறது. இதனை பூமணியின் இலக்கியப் படைப்புகளிலும் பார்க்க முடியும். கதைக்காக அவர் எதையும் வலிந்து சேர்ப்பதில்லை. ஆனால் சூழலின் மாற்றங்கள் கதைமாந்தர்களிடம் வெளிப்படுவதை அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

பூமணியின் ஒரு கதையின் பெயர் மட்டம். மிக முக்கியமான கதை அது. ஒரு ஊரில் ஆதிக்கசாதிக்காரர்கள் ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்களை ஏதேனும் சாக்கிட்டு தண்டனை தந்து கொண்டேயிருப்பார்கள். டவுனில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை வரும். அதற்கு இங்குள்ளவர்கள் வேலைக்கு செல்வார்கள். கையில் காசு புழங்கும். வீட்டுக்குத் தேவையான பலசரக்குப் பொருட்களை டவுனிலேயே வாங்கி வந்துவிடுவார்கள். இதனால் உள்ளூரில் கூலி வேலைக்கு ஆள் கிடைக்கக மாட்டார்கள். கடைகளில் வியாபாரம் நடக்காது. ஒடுக்கப்பட்டவர்கள் நிமிர்ந்து நடப்பதே அவர்களுக்கு பிரச்சனையாகும் ,ஊருக்குள் பஸ் வரும். அதில் எல்லோருமே சமமாக உட்கார்ந்து போவதும், மேல் சாதிக்காரர்கள் நின்று கொண்டிருக்க மற்றவர்கள் சீட்டில் உட்காருவதும் கூட எரிச்சலைக் கிளப்பும். ஒரு பேருந்து என்பது மக்களின் மனநிலையில் எத்தகைய மாற்றத்தினை எல்லாம் உண்டு பண்ணியது என்பதை விளக்கமாகச் சொல்லும் கதையும் கூட. அந்த அஊறில் ஒடுக்கபபட்டாவ்ர்கள் தனக்ளுக்கென ஒரு கோயில் கட்டுவதோடும், இதனை முந்தைய தலைமுறையினர் எப்படி உள்வாங்குகிறார்கள் என்பதாகவும் முடியும் கதை இது. ஓ எல்லோரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் கிராம பொருளாதாரத்தில் அனைவரின் பங்கும் இருந்தாக வேண்டும் என்பதைக் கதை சொல்லும். அதிகாரத்தின் பெயரால் எவரையும் அடக்கி வைக்க முடியாது என்றும் சொல்லும். இப்படித் தன்னுடைய கதைகளின் வழியே ஒரு காலத்தினைப் பதிவு செய்த அபூமணி கருவேலம்பூக்கள் படத்திலும் இதனைச் செய்திருக்கிறார்.
பூமணி தான் சந்தித்த மனிதர்களின் கதைகளையே எழுதுவதாகவும், இன்னும் எழுதித்தீர்ந்தபாடில்லை என்றும் கூறியிருக்கிறார். சிறுநீர் கழிக்க இரண்டு மைல் தூரம் நடந்து சென்று வரும் பெண்களின் பாடுகளைப் பற்றி என்ன எழுதினாலும் அது தீராது என்பது போல இன்னும் சொல்ல வேண்டிய கதைகள் ஏராளம் இருந்தது அவருக்குள். எந்தக் கதையிலும் பெண்கள் படும் பாடுகளை அவர் சொல்லாமல் விட்டதில்லை. இந்தப் படத்தில் வருகிற ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது.
வட்டார வழக்கு, சொலவடைகள் , வீடுகள், நிலங்கள் என எல்லாமே அப்பட்டமான வாழ்க்கையைக் காட்டக்கூடியவை. ‘பல்லக்கு வந்திருக்கு ராணி மகாராணிக்கு’ பாடல் ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்யும் பாடல். எளிய திருமணமும், குழநதைகளின் விளையாட்டும் என நம்மிடமிருந்து விலகிப் போன, நாம் மறந்தவற்றின் தொகுப்பு அந்தப் பாடல்.
பூமணி தொடர்ந்து ஏன் படங்கள் இயக்கவில்லை என்று கேட்கப்பட்டபோது சினிமாவில் செயற்கையாகவே எல்லாவற்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது அது தனக்கு ஏற்றதாக இல்லை என்றார். அதனால் நஷ்டம் அவருக்கில்லை. நமக்குத் தான். மக்களின் வாழ்க்கையை அவருக்கு திரைப்படமொழியில் சொல்லத் தெரிந்திருந்தது. அவர் நினைத்திருந்த சுதந்திரம் கிடைத்திருந்தால் மிக நல்ல படைப்புகள் அவரிடமிருந்து கிடைத்திருக்கும். அவர் எதையெல்லாம் எழுதினாரோ அவை காட்சியாக விரிந்திருக்கும். இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான நெருக்கத்தினை உயர்த்திப் பிடித்த முன்னோடி படைப்பாளியாக நமக்கு இருந்திருப்பார்.
கதைக்கு அல்லல்படும் இப்போதைய காலகட்டத்தில் அள்ள அள்ளக் குறையாத கதைகளை வைத்திருந்தார் பூமணி. அந்தக் கதைகளில் மனிதர்களும், அவர்களின் உளவியலும், நிலமும், நிலம் மாறி வந்துகொண்டே இருந்தது. அவை படங்களாக வந்திருந்தால் மிகப்பெரும் பண்பாட்டு ஆவணக் காட்சியாக இருந்திருக்கும்.
பாரதிராஜாவின் படங்களும் கிராமத்தைக் காட்டின அது ஒரு இயல்பில் கதையைச் சொன்னது. அதில் வெகுஜனங்களை ஈர்க்கிற பல்வேறு அம்சங்கள் இருந்தன. கருவேலம்பூக்கள் படத்தில் வெகுஜன ஈர்ப்புக்கென்று எந்த அம்சமும் இல்லை என்றாலும், அதன் உண்மைத்தன்மை போதுமானது, என்றைக்குமான படமாக மாறுவதற்கு. காலம் செல்லச் செல்ல பழமையின் மீதும் ஆவணப்படுத்துதலுக்கும் மதிப்பு கூடும். அது கருவேலம்ப்பூக்கள் படத்துக்கும் நிகழும்.











