ஆனந்த் குமரேசன்
INSIDE OUT 2 திரைப்படத்தை முன்வைத்து..
Inside Out [2015] குறித்து, ‘The Impact of Inside Out on the Mental Health of Children and Adolescents’ என்கிற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், conclusion’ல் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன:
// This paper examines the positive impact of the film Inside Out on the emotional self-awareness of children and adolescents. By personifying emotions as distinct characters – Joy, Sadness, Anger, Fear and Disgust – the film provides a unique and engaging framework for understanding and categorizing emotions. This visual and narrative approach simplifies complex emotional processes, helping young audiences recognize, accept, and balance their feelings more effectively. // [October 2024 – Communications in Humanities Research – ResearchGate]
INSIDE OUT 2 [Sequel] ஒன்பது வருடங்கள் கழித்து 2024ல் வெளியானது.
நாம் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முயல்கிறோமா? மாறாக நம்மைப் புரிந்துகொள்ள குழந்தைகளை நிர்பந்திக்கிறோம். நமக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் ‘நல்ல பிள்ளை’ என்கிற பட்டத்தைக் கொடுக்கிறோம். இந்த நிர்ப்பந்தம் அவர்களை இயல்பாய் இருக்க அனுமதிக்காது. ஏனெனில் இயல்பாக இருக்கிற குழந்தைகளோடு, இயல்பாக இருக்க முடிகிற பயிற்சி நமக்கு கிடையாது. ஏனெனில் நாமும் நல்ல பிள்ளைகளாக வளர்க்கப்பட்டவர்கள்தான். நாம் எப்படி வளர்க்கப்பட்டோமோ, அப்படி பிள்ளைகளை வளர்க்க முற்படுகிறோம். ‘நல்லபிள்ளை’ என்கிற அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. தற்போது அது மேலும் சிக்கலாகி குழந்தைகளை ஸ்மார்ட் ஃபோன்கள் வழிநடத்துகிற காலத்தில் உழல்கிறோம். இப்பொழுதாவது குழந்தைகளைப் புரிந்துகொள்கிற முயற்சியை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும்.
பருவமடைதலின்போது உணர்ச்சிகளின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும். இதே காலகட்டத்தில்தான் குழந்தைகள் தங்களைக் குறித்து சிந்திக்கவும் தலைப்படுகின்றனர். குழந்தைகளுக்குத் தங்களைப் பற்றிய நல்லவிதமான உணர்வு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். பெற்றோரின் அன்பும், வீடு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு உணர்வும், கல்விக்கூடங்கள் ஊக்கப்படுத்த வேண்டிய சிந்தனைத் திறனும், சக மனிதராகப் பார்க்கக்கூடிய சமூகமும் என எல்லாமுமே, அவர்கள் எப்படிப்பட்ட மனிதராகப் பரிணமிக்கப் போகிறார்கள் என்கிற போக்கில் முக்கியப் பங்காற்றுகின்றன.
உலகமே பொதுமுடக்கத்திலிருந்த 2020ன் தொடக்கத்தில் இப்படத்திற்கான [Inside Out 2] பணிகள் தொடங்கின. ‘Coming of age’ genreல் நாம் சில படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால் பருவமடைதலின்போது ஒரு குழந்தையின் ‘மனதிற்குள்’ என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதைப் பார்க்கும்பொழுது, இப்போதிருக்கிற நாம், ‘ஏன் இப்படி இருக்கிறோம்?’ என்பதையுமே பார்க்க முடிகிறது.
INSIDE OUT 2வை இயக்கியிருப்பது Kelsey Mann. அவரும் தன்னுடைய சிறுவயது அனுபவங்களிலிருந்தே இக்கதையை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார். அவருடைய குழந்தைப்பருவ பிறந்தநாள் பார்ட்டியின்போது எடுத்த ஒரு புகைப்படம் உந்துதலாக அமைந்திருக்கிறது.
லாக்டவுன் காலத்தில், ரைலியின் வயதையொத்த தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பெறப்பட்ட தனிப்பட்ட அனுபவங்களும் திரைக்கதை ஆக்கத்திற்குப் பயன்பட்டிருக்கின்றன. ஒரு ‘பெற்றோராக’ அவர்களுடைய பார்வை படத்தின் வடிவமைப்பிற்கும், உணர்ச்சிகளை இன்னும் நுட்பமாகக் கையாளவும் உதவியிருக்கிறது. குறிப்பாக ‘மகிழ்ச்சி’ [Joy] evolve ஆகியிருக்கிறது.
தயாரிப்புக் குழுவினர் Clinical Psychologist Lisa Damourஐத் தொடர்ந்து சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றனர். பருவமடைதலின்போது பதின்வயதினரின் உணர்ச்சிகளில் ஏற்படுகிற மாற்றங்களைத் துல்லியமாகக் காட்சிப்படுத்துவதற்காக அவர் எழுதிய புத்தகங்களின் வழிகாட்டுதலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மேலும் INSIDE OUT முதற்பாகத்தின்போது உதவி புரிந்த University of Californiaவில் பணிபுரிந்த Professor of Psychology Dacher Keltnerம் ஆலோசகராக இருந்திருக்கிறார்.
கதை உருவாக்கத்தின் போது, ஒன்பது பதின்பருவக் குழந்தைகளின் கண்காணிப்பில் பதின்பருவ வாழ்வு [Teenage life] சரியாக சித்திரிக்கப்படுகின்றதா என்பது தொடர்ந்து உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுடைய கருத்துக்களும் கவனமாகப் பெறப்பட்டிருக்கின்றன. அவை பல்வேறு காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. Nostalgia என்கிற ‘உணர்ச்சி’ இப்படத்தில் சேர்க்கப்பட்டதற்கும் இவர்களுடைய பங்களிப்பே காரணமாய் இருந்திருக்கிறது.
PIXAR தயாரிப்புகளில் முதன்முறையாக, பெண் இசையமைப்பாளர் Andrea Datzman இசையமைப்பை மேற்கொண்டுள்ளார்.
ரைலி வளர்கிறாள். அவளுக்கு இப்பொழுது 13 வயதாகிறது. Officially a teenager. தனிச்சிறப்புகளைப் பெற்றிருக்கிறாள். நன்றாகப் படிக்கிறாள். கனிவாய் இருக்கிறாள். பூனைகளுடன் அன்பாய் இருக்கிறாள். பழைய உடைகள் பொருந்தவில்லை. பற்களுக்கு கிளிப் மாட்டிக்கொள்கிறாள். தற்போது அவளுடைய ஆளுமையில் குறிப்பிடத்தகுந்த ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்தின் மீதிருந்த பிணைப்பு குறைந்து ‘நட்பு’ மேலோங்கியிருக்கிறது. ‘இது என்னுடைய இடம்’ அல்லது ‘இங்கு நானும் ஒருவர்’ என்கிற உணர்வு [Sense of Belonging] மற்றும் பாதுகாப்பு உணர்வை [Sense of security] வீட்டிற்கு வெளியேவும் உருவாக்கிக்கொள்ள குழந்தைகள் முயல்கின்றனர். இது வளர்ச்சியின் ஒரு பகுதி. பதின்பருவத்தில் ‘நட்பு’ இவற்றிற்கான வாய்ப்புகளை அளிக்கிறது.
அவளுடைய கடந்த கால நினைவுகள் [memories] அவளுடைய நம்பிக்கைகளாக [Beliefs] மாறியிருக்கின்றன. அந்த நம்பிக்கைகள் எல்லாம் சேர்ந்து அவளுடைய சுய உணர்வு [Sense of Self] கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தான் ‘நல்ல மனிதர்’ [I am a good person] என்கிற எண்ணம் உருவாகி வலுப்பெறுகிறது.
‘மகிழ்ச்சியின் பணி’ கசப்பான நினைவுகளை மறக்க வைப்பதாகவே இருக்கிறது. அச்செயல் நாம் ‘எதை நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறோம்?’ என்கிற கேள்வியை எழுப்புகிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சியாய் இருப்பது என்பது, ஒரு குழந்தைக்குத் தன்னைப் பற்றிய நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது. தான் ‘சரியாக இருக்கிறோம்’ [I am Ok] என்கிற நம்பிக்கையை உருவாக்குகிறது.
இந்த நம்பிக்கைகள் எல்லாம் சேர்ந்து ஒரு குழந்தையின் ஆழ்மனதில் நம்பிக்கை அமைப்பாக [BELIEF SYSTEM] கட்டமைக்கப்படுகிறது. அதுவும் அட்டகாசமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரைலியைப் பொறுத்தவரை ‘அம்மாவும் அப்பாவும் என்னை நினைத்துப் பெருமைப்படுகின்றனர்’, ‘நான் கனிவானவள்’, ‘நான் உறுதியானவள்’, ‘நான் துணிச்சலானவள்’, ‘நான் நல்ல நண்பர்’, ‘நான் ஒரு வெற்றியாளர்’ என, இந்த நம்பிக்கைகள் எல்லாம் சேர்ந்துதான், அவளை ஒரு ‘நல்ல மனிதராகக்’ கருத வைக்கிறது. அது அவளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
‘நம்பிக்கைகள்’ உலகெங்கிலும் நுட்பமாக மாறுபடுகின்றன. நாடு, மாநிலம், ஊர், மொழி, மதம், சாதி, இனம், நிறம், உடலமைப்பு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, பொருளாதாரச் சூழல், வீடு, பெற்றோரின் நடவடிக்கைகள், கல்விமுறை, சமூகம், சட்டம், சமூக ஊடகங்கள் என எல்லாம் சேர்ந்து கட்டமைக்கிற narrative, இன்னபிற எனப் பல்வேறு காரணிகள் சேர்ந்துதான் ‘நம்பிக்கை அமைப்பு’ உருவாகிறது. நாம் நம்முடைய குழந்தைகள் மனதில் எந்தவிதமான நம்பிக்கைகளை விதைத்திருக்கிறோம் என்பதை ஆராய வேண்டும். அந்த நம்பிக்கை அமைப்புதான் அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் வழிநடத்தப் போகிறது. நம்முடைய வாழ்வை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. நாம் நம்மை ‘evolve’ ஆக அனுமதிக்கும்போதுதான் அதில் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் பல சமயங்களில் பதின்பருவத்தில் உருவான நம்பிக்கை அமைப்பு, மாற்றங்களுக்கு உள்ளாவதில்லை. அதை நாம் உணர்வதும் இல்லை.
ரைலியின் பருவமடைதல் [Puberty] காலம் வருகிறது. தலைமைச் செயலகத்தில் இருக்கிற ஐந்து உணர்ச்சிகளான மகிழ்ச்சி [joy], சோகம் [sadness], பயம் [fear], அருவருப்பு [disgust] மற்றும் கோபம் [anger] குழம்புகின்றன. தங்களுடைய பணியகத்தில் ஒளிர்ந்த ‘பருவமடைதல்’ குறித்த எச்சரிக்கை மணியைப் புறந்தள்ளிவிட்டு, நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால் ‘தலைமைச் செயலகத்திற்குள்’ பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. PUBERTY IS MESSY என்கிற எச்சரிக்கைப் பலகை வைக்கப்படுகிறது. ரைலியின் புற உலகத்திலும் அவளுடைய நடவடிக்கைகள் கட்டுக்குள் இல்லை. எனினும் ரைலியின் தாய் அவளை இயல்பாகக் கையாளுகிறார்.
குழந்தைப்பருவத்தில் தந்தையின் பணி காரணமாக ஊர் மாறியது அவளுக்குச் சவாலாக அமைந்தது. இப்பொழுது பருவமடைதலின்போது மற்றொரு சவால் உருவாகிறது. ரைலி தன் இரு பள்ளித்தோழிகளோடு ஒரே குழுவில் ஹாக்கி விளையாடலாம் என மகிழ்ந்திருக்க, அவர்கள் பள்ளி மாறப்போவதைத் தெரிவிக்கின்றனர். அதற்கு ரைலியின் எதிர்வினை இயல்பானதாக இல்லை. அவள் சோகத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக அவர்களின் முடிவு தன்னைப் பாதிக்கவில்லை என்பது போல் காட்டிக்கொள்ள முயன்று குழம்பிப் போகிற அவள் மனதில், முதன்முறையாகப் ‘பதற்றம்’ உண்டாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
தலைமைச் செயலகத்தில் பணியகத்தின் [Console] நிறம் முற்றிலுமாய் மாறியிருக்கிறது. இப்பொழுது அந்த நிறத்தில், புதிதாக ஓர் உணர்ச்சி வந்து சேருகிறது – anxiety [பதற்றம்] வந்த நொடியிலிருந்தே Hyper Active’ஆக இருக்கிறது. கூடவே envy [பொறாமை] embarassment [தர்மசங்கடம்] மற்றும் boredom [சலிப்பு] ஆகியவை வந்து சேருகின்றன. மேலும் nostalgia [கடந்த காலத்தை அசை போடுவது] எட்டிப் பார்க்க , இன்னும் உனக்குக் காலம் இருக்கிறது என மற்ற உணர்ச்சிகள் சேர்ந்து அதைத் திருப்பி அனுப்பி விடுகின்றன.
பதற்றம்
எல்லாவிதமான அசம்பாவிதங்களுக்கும் மனதளவில் ரைலியைத் தயார்படுத்துவதை நோக்கமாக வைத்திருக்கிறது. ‘பயம்’ பார்க்க முடிந்த ஆபத்துகளில் இருந்து ரைலியைப் பாதுகாக்கிறது. அது போல அவளால் பார்க்க முடியாத ஆபத்துகளை யூகித்து அவளைப் பாதுகாப்பது பதற்றத்தின் முதன்மையான வேலை. அவள் எந்தத் தப்பும் செய்து விடாமல் இருக்க வேண்டும் என முனைகிறது. இதனால் அவள் எப்பொழுதும் பூரணத்துவத்துடன் செயல்படவேண்டும் என்கிற அழுத்தம் உருவாகிறது. அது குழப்பத்தை அதிகரிக்கிறது.
சலிப்பு
எதன் மீதும் ஆர்வமின்மையைப் புகுத்திக்கொண்டே இருப்பது.
பொறாமை
அவளிடம் இல்லாத, மற்றவர்களிடம் இருக்கிற எல்லா விஷயங்களின் மீதும் கவனத்தைத் திருப்புவது. அது தன்னிடம் இல்லை என ஏங்க வைப்பது.
தர்மசங்கடம்
எதையாவது சம்பந்தமில்லாமல் சொல்லியோ, செய்தோ அவமானப்படுவது.
இந்த எல்லா உணர்ச்சிகளும் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. ‘வளர்ச்சி’ என்பது உடலும் மனமும் முதிர்ச்சியடைய அனுமதிப்பது. அதுதான் பதின்பருவத்தில் நடைபெறுகிறது.
‘உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டிலிருந்து செயலாற்றுகிற’ [react] குழந்தைப்பருவ மனநிலையிலிருந்து, மெல்ல ‘சிந்தித்துச் செயலாற்றுகிற’ [respond] adult’ஆகப் பரிணமிப்பது.
சிந்தித்துச் செயலாற்றுவது [Emotional Intelligence] என்பது, எந்தவொரு சூழலுக்கும், என்ன விதமான எதிர்வினையைத் தேர்வு செய்வது என்கிற நம்முடைய ‘அதிகாரத்தை’ [Power] நாமே தக்கவைத்துக்கொள்வது.
பதற்றம் வந்துவிட்ட நிலையில் ரைலி பலவாறாக யோசிக்கிறாள். நண்பர்கள் இல்லாத நிலையில், பள்ளியில் ‘தனக்கான இடம் என்ன?’ என்கிற கேள்வி எழ, புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள முனைகிறாள். பள்ளியின் ஹாக்கி அணியில் இடம்பெறுவதே எதிர்காலத்திற்கு நல்லது என அதற்கான காரியங்களைச் செய்கிறாள். ஆனால் அது சொதப்பிவிடுமோ என்கிற பதற்றமும் அதிகரிக்கிறது. கடைசி ஆட்டத்தில் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதாக வாக்களித்திருந்தாள். ஆனால் தன்னுடைய எதிர்காலம் கருதி அதை மீறுகிறாள். அதுதான் சரியான முடிவு என நம்புகிறாள். பதற்றம், பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. நண்பர்கள் வேறொரு பள்ளிக்குச் சென்றபின் தான் இங்கு தனிமைப்பட்டுப் போய்விடுவோம் என நினைக்கிறாள். பதற்றம் அவளை ஆட்டுவிக்கிறது.
பதற்றத்தின் ஆதிக்கம் அதிகமாவதை மகிழ்ச்சி உணருகிறது. ‘தான் நல்ல மனிதர்’ என்கிற சுய உணர்வை [sense of self] பதற்றம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. இதனால் பழைய உணர்ச்சிகளும் புதிதாக வந்த உணர்ச்சிகளும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட புதிய உணர்ச்சிகள் பழைய உணர்ச்சிகளான மகிழ்ச்சி, சோகம், பயம், அருவருப்பு, கோபம் ஆகிய அனைத்தையும் ஒரு பாட்டிலில் போட்டு அடைத்து வைக்கின்றனர் [bottled up emotions].
புதிய முதன்மையான உணர்ச்சியாகப் பொறுப்பெடுத்துக் கொள்கிறது ‘பதற்றம்’. இனி பழைய உணர்ச்சிகள் தேவையில்லை, ‘அவள் வளர்கிறாள்’ அதற்கேற்ற உணர்ச்சிகள்தான் தேவை, அவளுடைய எதிர்காலம்தான் முக்கியம் என்கிறது. அதனால் சக புதிய உணர்ச்சிகளான பொறாமை, சலிப்பு, தர்மசங்கடம் என எல்லாம் சேர்ந்து அவளுடைய ஆளுமையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வேலைகளைத் தொடங்குகின்றன.
பாட்டிலில் போடப்பட்ட பழைய உணர்ச்சிகள் அனைத்தும் ஆழ்மன ரகசியக் கிடங்கில் [The vault] அடைத்து வைக்கப்படுகின்றன. அங்கு அவை, தாம் [suppressed emotions] அமுத்தப்பட்ட உணர்வுகளாக மாறிவிட்டதை உணர்கின்றன. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மகிழ்ச்சி வாதாட, அது denial [மறுத்தல்] என சிறு வயதில் ரைலி ரசித்த bloofy [a character from a show] திடீரெனத் தோன்றிச் சொல்கிறது. dark deep secret [ ஆழமான ரகசியம்] Secret Crush [ரகசிய ஆசை] – ஒரு video game வீரன்,இவை எல்லாம் அங்கே இருக்கின்றன.
‘நாயகன்’ ஆக ஏங்கித்தவிக்கும் அந்த video game வீரன், தன்னுடைய இயலாமையைக் கழிவிரக்கமாக [Self Pity] வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். தங்கள் மனங்கவர்ந்த வீரனின் இந்த நிலையைக் கண்ணுற்று, ‘அருவருப்பு’ அவனை உடனடியாக மீட்க முயற்சிக்கிறது. “நீ தூக்கி எறியப்படக்கூடிய ஆள் இல்லை.” “உன்னுடைய சாபத்தையே நீ வரமாக்கிக்கொள்ள வேண்டும்” என சமாதானங்கள் சொல்லி அவனை எப்படியாவது ‘நாயகன்’ ஆக்கி விட முயல்கிறது. ஆக, பரிதாபப்படுவதும் [sympathy], காப்பாற்ற விரும்புவதும் [rescue] பதின் வயதுகளிலேயே மனித மனத்தின் கூறுகளில் படிந்திருக்கின்றன. தான் மனதுக்குள் வைத்துப் போற்றும் ஒருவரை வெற்றியாளராக மாற்ற, ஏதோ ஒரு விதத்தில் தன்னுடைய உதவி தேவைப்படுகிறது என்பது, தானே வெல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தி, அப்பருவத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தன்முனைப்பு’ [Ego] திருப்தியடைய உதவுகிறது. நாயக மைய சினிமாக்களிலும் சரி, நிஜத்திலும் சரி இந்த மனநிலைதான் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது.
ஐந்து உணர்ச்சிகளும் அங்கிருந்து எப்படியாவது மேலெழுந்து தலைமைச் செயலகத்திற்குச் செல்ல முயல்கின்றன. அவர்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் உருவாகின்றன. ஆனால், ரைலியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்கிற மகிழ்ச்சியின் தீவிரத்தை உணர்ந்து, மகிழ்ச்சியுடன் சேர்ந்து பல முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன. Stream of conciousness [பிரக்ஞையின் ஓடை] வழியாகத் தப்பிக்கலாம் என்கிற முயற்சி தோல்வியடைகிறது.
‘நான் நல்ல மனிதர்’ என்கிற sense of selfஐ மீட்டுவிட்டால் ரைலியைக் காப்பாற்றிவிடலாம் என முடிவு செய்கின்றனர். புற உலகத்தில் ரைலி, ஹாக்கி அணியின் தன் புதிய நண்பர்களோடு பொருந்திப் போக [to fit in] பல பொய்களைக் கூறுகிறாள். தன்னுடைய உண்மையான விருப்பங்களைக் கூட மற்றவரின் ஒப்புதல் வேண்டி எள்ளலாக [sarcasm] முன்வைக்கிறாள். அதற்குப்பின் ‘உண்மை கூட சந்தர்ப்பங்களில் எள்ளலாகவே ஒலிக்கிறது’ இந்த நடத்தை எதிர்பாராத, மீள முடியாத பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்தச் செயல்பாடுகளினால் அவளுடைய இயல்பான ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைகிறது.
சமூக வலைதளங்களின் கட்டமைக்கப்பட்டிருக்கிற ‘இயல்புக்கு’ [sarcastic nature] ஒன்றிப் போகிற கேலியும், வசையும், ‘fit in’ ஆக எத்தனிக்கிற ஆளுமைச் சிதைவைத்தான் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வீண்வம்புகளால் கட்டமைக்கப்படுகிற பிம்பத்திற்கும் ஆளுமைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
பதின்வயதில் தான் விரும்புகிற குழு அல்லது அமைப்பு [பல வடிவங்களில் சமூகத்தில் நிலவுகின்றன – அவற்றை இன்னும் சிக்கலாக்குகிறது இணை உலகமாகி விட்ட இணைய உலகம் ] தன்னை ஏற்றுக்கொள்வதற்காக [validation] தங்களுடைய இயல்பை விட்டுக்கொடுக்கத் துணிகின்றனர். பிடித்ததையும் கூட வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம் இருக்கிறது. பிடிக்காதவைக்கும் NO சொல்வதும் இல்லை. ‘ஒருவேளை… இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ’ என்கிற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. ‘தனிமைப்பட்டு விடுவோமோ..?’ [Left Out] என்கிற பதற்றம்தான் இவ்வாறு செயல்பட வைக்கிறது.
பழைய உணர்ச்சிகளின் பயணத்தில் அவர்கள் கற்பனை நிலத்தை [Imagination land] அடைகின்றனர். ஏற்கெனவே அதைப் பார்த்திருக்கிற மகிழ்ச்சி, அது முற்றிலுமாக மாற்றமடைந்திருப்பதை உணர்கிறாள். குழந்தைப் பருவத்தில் இதே இடம் விதவிதமான புதிய புதிய கற்பனைகளால் செழித்திருந்தது. ஆனால் தற்போது அப்படி எதுவும் இல்லை. கற்பனைகள் முற்றிலுமாக வற்றிப்போய், சமூகத்தால் போற்றப்படுகிற ரைலிக்குப் பிடித்த சில முகங்கள்தான் மலைபோல ஆக்கிரமித்திருக்கின்றன. மேலும் எண்ணிலடங்கா வதந்திகள் [rumours] மற்றும் கிசுகிசுக்கள் [gossips] வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றன.
குழந்தைகளுக்கு நம்பிக்கையான, பாதுகாப்பான உரையாடலுக்கான வெளியை [Safe Space] ஏற்படுத்துவது மட்டுமே அவர்களிடம் உண்மைகளைக் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய ஒரே வழி. அதை வீடும், கல்விக்கூடமும்தான் கவனத்துடன் சாத்தியப்படுத்த இயலும்.
ஒருவராவது தலைமைச் செயலகத்திலிருந்து நிலைமையைக் கண்காணிக்க வேண்டியது இன்றியமையாதது என்பதை உணர்ந்து, இருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி, ‘சோகத்தை’ சமாதானம் செய்து அனுப்புகின்றனர்.
மற்ற நான்கு உணர்ச்சிகளின் பயணம் தொடர்கிறது. அதில் ‘பதற்றம்’ ஒட்டுமொத்த ‘கற்பனைத் திறனையும்’ ரைலிக்கு எதிராக உபயோகிப்பதை அவர்கள் உணர்கின்றனர். ‘எதுவெல்லாம் தப்பாகும்?’ என கற்பனை செய்வதற்கு மட்டுமே பதற்றம், ‘கற்பனைத் திறனை’ முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. ‘எதுவெல்லாம் நல்லவிதமாக நடக்கும்?’ என்பதற்கு கற்பனையை மாற்றி அமைக்கின்றனர். ‘பதற்றம்’ இதை உணர்ந்து புற உலகத்தில் ரைலியை அவளுடைய ஆளுமையை முற்றிலுமாகச் சிதைக்கக்கூடிய மோசமானத் தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது.
ரைலி ஹாக்கி அணியில் தன்னுடைய பெயர் இல்லை என்பதைத் ‘திருட்டுத்தனமாகத்’ தெரிந்துகொள்கிறாள். பயிற்சியாளரின் மனதில் இடம்பிடிக்க என்ன செய்வது எனப் பதற்றத்தோடு மற்ற உணர்ச்சிகளும் யோசிக்கத் தொடங்குகின்றன. அதனால் Brainstorm [யோசனைகளின் புயல்] ஏற்படுகிறது. அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அதன் வழியே பழைய உணர்ச்சிகள் மீண்டும் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து விட முயல அதுவும் தோல்வியில் முடிகிறது.
பதற்றம் தன்னுடைய முயற்சியில் புதிய ‘sense of self’ஐ உருவாக்குகிறது. “அவள் யார் என்பது முக்கியம் அல்ல, அவள் யாராய் இருக்கவேண்டும் என்பதே முக்கியம்” என்பது பதற்றத்தின் வாதம். ஆனால் எதிர்பாராத விதமாக அது ரைலியின் ஆளுமையை I am not good enough [நான் குறையுள்ளவள்] எனும் நம்பிக்கைக்குள் சிக்க வைக்கிறது. பதற்றம் உட்பட எல்லா உணர்ச்சிகளும் அதிர்ச்சியடைகின்றன.
வளரும்பொழுது பதற்றம் அதிகமாகி மகிழ்ச்சி குறையும் என்பதுதான் இயல்பு போல என்கிற முடிவுக்கு அவை வருகின்றன.
ரைலி ஹாக்கி விளையாட்டில் ‘தன்னை நிரூபிக்க’ பதற்றத்தோடு விளையாடுகிறாள். தன் சொந்த அணியின் வீரர்களுக்கு ஒத்துழைக்காமல் தான் மட்டும் வெற்றி பெற விரும்புகிறாள். மூர்க்கத்தனமாக விளையாட எதிரணியில் இருக்கும் தன் தோழியையே காயப்படுத்திவிடுகிறாள். ரைலிக்கு penalty கொடுக்கப்படுகிறது. அவளின் பதற்றம் கட்டுப்பாடின்றி பன்மடங்கு பெருகி அவளை செயலிழக்க வைக்கிறது.
திரும்பிச் செல்லக்கூடிய ஒரே வாய்ப்பையும் இழந்திருந்த நான்கு உணர்ச்சிகளும், வேறு வழியில்லாமல், மோசமான நினைவுகளை [bad memories] ஆழிப்பேரலையாக எழச் செய்து, அதைப் பயன்படுத்தி மகிழ்ச்சி, கோபம், அருவருப்பு, பயம் தலைமைச் செயலகத்தை வந்தடைகின்றன.
பதற்றம் தறிகெட்டுக் கட்டுக்கடங்காமல் ரைலியை ஆக்கிரமிக்கிறது. மற்ற உணர்ச்சிகள் செய்வதறியாது அதிர்ந்துபோய் நிற்கின்றன. எல்லா உணர்ச்சிகளும் சேர்ந்து ரைலியின் ‘புதிய ஆளுமை’ குறித்த நம்பிக்கையான ‘I am not good enough’ஐப் பெயர்த்து எடுக்கின்றன. மகிழ்ச்சியுடன் இணைந்து மீண்டும் பழைய ஆளுமையின் நம்பிக்கையான ‘I am a good person’ஐப் பொருத்துகின்றன.
பதற்றம் “நான் அவளைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்” என்கிறது. மேலும் “ரைலி யார் என்பதை உணர்ச்சிகளான நாம் முடிவு செய்ய முடியாது” எனவும் கூறுகிறது. இது மகிழ்ச்சியின் ‘பார்வையை’ [Perspective] முற்றிலுமாக மாற்றுகிறது.
மகிழ்ச்சி தான் பொருத்திய பழைய ஆளுமையையும் – ‘நான் ஒரு நல்ல மனிதர்’ பெயர்த்து எடுக்கிறது. இப்பொழுது பலவிதமான முரண்பட்ட வெளிப்பாடுகளுடன் மற்றொரு புதிய ஆளுமை உருவாகிறது.
மாறுகிற ஆளுமை: ‘நான் சுயநலவாதி;’ ‘நான் கருணையுள்ளவள்;’ ‘நான் குறையுள்ளவள்;’ ‘நான் ஒரு நல்ல மனிதர்’ ‘நான் எல்லோருடனும் ஒத்துப்போக வேண்டும் ஆனால் நானாகவும் இருக்க வேண்டும்;’ ‘நான் தைரியமானவள் ஆனால் எனக்கு பயங்கள் உண்டு;’ ‘வெற்றிதான் எல்லாம்;’ ‘நான் தவறுகள் செய்யக்கூடியவள்;’ ‘நான் நல்லவள்;’ ‘நான் மோசமானவள்;’ ‘நான் ஒரு நல்ல நண்பர்;’ ‘நான் ஒரு மோசமான நண்பர்;’ ‘நான் பலசாலி;’ ‘நான் பலவீனமானவள்; எனக்கு சில நேரங்களில் உதவி தேவை;’
இப்படியான நம்பிக்கைகள் மாறி மாறி எழ, எல்லா உணர்ச்சிகளும் சேர்ந்து ரைலியின் மாறிக்கொண்டேயிருக்கும் அந்தப் புதிய ஆளுமையை மிகுந்த கனிவோடு அரவணைத்துக் கொள்கின்றன. பதற்றமும் அவர்களோடு சேர்ந்துகொள்கிறது. எல்லா உணர்ச்சிகளின் கனிவான அரவணைப்பினால் ரைலி மெல்ல ஆசுவாசமடைகிறாள். புற உலகில், காயமடைந்த நண்பர்களும் அவளிடம் வருகின்றனர். ‘அவர்கள் வேறு பள்ளிக்கு மாறப்போவதாகச் சொன்னவுடன் மிகவும் பதற்றமாகி பல தவறுகளைச் செய்துவிட்டதாகக் கூறி’ மன்னிப்புக் கோருகிறாள் ரைலி. அவர்களும் அவள் நிலையைப் புரிந்துகொண்டு அவளை ஏற்றுக்கொள்கின்றனர். நட்பு மீண்டும் மலர்கிறது. ரைலியிடம் மீண்டும் மகிழ்ச்சி வந்து சேருகிறது. இயல்பாக விளையாடுகிறாள்.
‘ஹாக்கி அணியில் அவளுக்கு இடம் கிடைக்குமா?’ என்பது அறிவிக்கப்படும் முன், மீண்டும் பதற்றம் மேலோங்கி என்னவெல்லாம் தவறாக நடக்கக்கூடும் என்பதை அடுக்கத் தொடங்க, மகிழ்ச்சி “எதுவும் ‘இப்பொழுது’ நடக்கவில்லை அல்லவா?” எனக் கூறி பதற்றத்தை நிதானிக்கச் செய்கிறது.
ரைலியின் முதிர்ச்சி: ‘அணியில் ஒருவேளை இந்த வருடம் இடம் கிடைக்கவில்லையெனில் அடுத்த வருடம் முயலலாம்’ என்கிற பக்குவத்தை அடைந்திருக்கிறாள். எல்லா உணர்ச்சிகளும் மகிழ்கின்றன. ஆம் ! “ரைலி மிகவும் புத்திசாலி; தேர்ந்த ஹாக்கி வீரர்; மிகவும் கற்பனைத்திறன் உடையவர்; அவளுக்கு சலிப்பும் ஏற்படும்; ஆனால் அவளால் மற்றவர்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லை; சில சமயங்களில் அவளும் கிண்டல் செய்வாள்; படுமோசமான யோசனைகளைச் செயல்படுத்துவாள்; அவ்வப்போது தவறுகள் இழைக்கக்கூடியவள்; தன் மீது தானே சில சமயங்களில் மிகவும் கடுமையாக நடந்து கொள்வாள்.” ஆனால் இவை எல்லாம் சேர்ந்துதான் “ரைலி யார்?” என்பதை உருவாக்கியிருக்கிறது. அவளை முழுமையாக எல்லா உணர்ச்சிகளுக்கும் மிகவும் பிடிக்கும். அவளுடைய எல்லா குறைகளையும் சேர்த்து.
இந்த இரண்டு படங்களும் உணர்ச்சிகள் குறித்த ஒரு அத்தியாவசியமான பார்வையை உருவாக்குகின்றன. ‘சோகம்’ தவிர்க்கப்பட வேண்டிய உணர்ச்சி அல்ல. ‘கொண்டாட்டமான மனநிலை’ மட்டுமே ‘மகிழ்ச்சி’ கிடையாது. ‘பதற்றம்’ இயல்பானது – அது வளர்ச்சியின் ஒரு பகுதி – கனிவுடன் கையாளப்படும்பொழுது ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். எல்லா உணர்ச்சிகளும் அவசியமானவை. அவற்றின் பங்களிப்பில்தான் தான் நம்முடைய ‘ஆளுமை’ உருவாகிறது.
கதாபாத்திரங்களாகப் படைக்கப்பட்டிருக்கும் உணர்ச்சிகள் vulnerable ஆகக்கூடிய சந்தர்ப்பங்கள், மனதின் நெகிழ்வுத்தன்மையை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. அதுதானே நம்மை ‘மனிதர்’ ஆக்குகிறது. நெகிழ்வுதானே மாற்றத்திற்கு இடம் கொடுக்கும். உறுதியாய் இருக்க வேண்டியது மட்டுமே மனதின் ஒரே நிலை அல்ல என்பதைக் காணும்பொழுது நிம்மதி [Relief] ஏற்படுகிறது. இந்த நிலை குழந்தைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
‘அச்சுகளுக்குள்’ குழந்தைகளைப் பொருத்த முயல்வதைவிட, அவர்களின் இயல்பான தனித்துவத்தை வெளிப்படுத்தக்கூடிய வெளியை அமைத்துக் கொடுத்து, அவர்களை நெறிப்படுத்துவதுதான் [moderate] அவர்களுடைய சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும். அப்படி வளருகிறவர்கள்தான் psychologicalஆக Adult ஆக முடியும். இல்லையெனில் physicalஆக Adult ஆகிவிட்டு, emotional intelligence இல்லாமல் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் வீழ்வர்.
பொதுமனநிலையில், ‘நல்லவர்’ அல்லது ‘கெட்டவர்’, நல்லது – கெட்டது, கருப்பு – வெள்ளை என இரு துருவங்களாக [polarity] மட்டுமே கட்டமைக்கப்பட்டு வலுப்பெற்றிருக்கிறது. ஆனால் அது உண்மை [fact] அல்ல. இந்த இரு கதைகளிலுமே ‘மகிழ்ச்சி’ நல்லது, ‘சோகம்’ [INSIDE OUT] அல்லது ‘பதற்றம்’ [INSIDE OUT 2] கெட்டது ‘மற்றவை’ பொருட்படுத்தத் தகுந்ததல்ல என்கிற பழக்கப்படுத்த வடிவத்திலிருந்து [template] இந்தக் கதையாடல் [narrative] அறிவியல்பூர்வமாக விலகி நிற்கிறது. எல்லா விதமான உணர்ச்சிகளும் உள்ளடங்கிய தொகுப்புதான் [spectrum] மனித மனம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது நம்மையும், மற்றவரையும் முன்முடிவுகளும், தீர்மானங்களுமின்றி [prejudice & judgement] ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய’ வெளியை உருவாக்குகிறது.
பொது உளவியலில் [general psychology] இப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. Mental health குறித்த உரையாடல்கள் இயல்பாகின. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ‘மகிழ்ச்சியை’ மட்டுமின்றி ஏனைய உணர்ச்சிகளை இனங்கண்டு கொள்ளவும் அவற்றைப் புரிந்துகொள்ளவும் , ஏற்றுக்கொள்ளவும் உதவின. குறிப்பிட்ட உணர்ச்சிகளின் மீதிருக்கும் களங்கம் [stigma] விலகி, எல்லா உணர்ச்சிகளுமே நலமான வாழ்விற்கு அவசியம் என்கிற Emotional Literacy உருவானது. பல கல்வியாளர்கள் மற்றும் Psychologists இப்படங்களைப் பரிந்துரை செய்கின்றனர். பள்ளிகளில் Social-Emotional Learning’ஐ செயல்படுத்த இப்படங்கள் பயன்படுகின்றன.
Cambridge Univeristy Press: 11 [Volume 225 Issue 5] Dec 2024, Inside Out 2 குறித்து வெளியிட்டுள்ள கட்டுரையில் கீழ்க்காணும் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன :
// Through its creative storytelling and use of metaphor, it opens essential conversations about mental health, helping young audiences recognize that emotional challenges are common – and that learning to navigate them is a key part of growing up. //
இந்தப் படங்கள் சாத்தியமாகத் தொழில்நுட்பம் பெரிதும் உதவியிருக்கிறது. அதே நேரத்தில் இந்தப் படைப்புகளின் ‘நோக்கம்’ [intention] உன்னதமானது. ஒரு மனித மனத்தில் தொடங்கி இன்னொரு மனித மனத்தை சென்றடையக் கூடிய விதத்தில் இவற்றின் ‘திரை ஆக்கம்’ [making] இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் சுமார் பதினைந்து வருடங்கள் செலவிடப்பட்டு மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கவனம் தான் சக உயிரின் மீது நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடு !
தொடரும்…











